அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம் – வைகோ அழைப்பு
சென்னை: அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி செயல்படும் என்று அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையலாம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கின. மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது மக்கள் நலக் கூட்டு இயக்கம். பஞ்சபாண்டவர் கூட்டணி என்று கூறி வந்த நிலையில் தேர்தல் கூட்டணியில் இணையமாட்டோம் என்று கூறி மமக விலகியது.
இந்த நிலையில் இந்த கூட்டு இயக்கத்தில் நான்கு பேர் இணைந்து தேர்தலுக்காக மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியுள்ளனர். மக்கள் நலக்கூட்டணியில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 2016 சட்டசபை தேர்தலை சந்திக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளனர்.
இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயாரித்துள்ளனர். இதை இறுதி செய்து, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று வெளியிட்டனர். அதில் ஊழல் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அதிமுக, திமுகவிற்கு எதிராக மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகிறோம். மக்கள் நலக் கூட்டு இயக்கம் இன்று முதல் மக்கள் நலக்கூட்டணியாக இன்று முதல் உருவாகியுள்ளது.
மக்கள் நலக்கூட்டு இயக்கம் நிரந்தரமானது. இதில் நான்கு அமைப்புகள் நிரந்தரமாக இருக்கும். இது இந்த சட்டசபை தேர்தல் மட்டுமல்லாது, உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல் என ஒரு தொலை நோக்கோடு நிரந்தரமாக செயல்படும் என்றும் மக்கள் நலக்கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று வைகோ தெரிவித்தார்.
இந்த கூட்டணியை வலுவான கூட்டணியாக மாறி தேர்தலை சந்திப்போம். இந்த கூட்டணியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளுக்கு இடமில்லை என்று கூறிய வைகோ, ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையலாம் என்று வைகோ தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.