ராஜீவ் கொலை குற்றவாளிகள் போல் வீரப்பன் கூட்டாளிகளுக்கும் கருணை தேவை: தலைவர்கள்
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 23 வருடங்களாக சிறையில் வாழும் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், அவர்களது விடுதலைக் குறித்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், சிறையில் வாழும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வதாக இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திராவிடக் கழகத் தலைவர்கள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.
முதல்வரின் உத்தரவால் மகிழ்ச்சி...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, ‘அவர்கள் தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்து விட்டனர்.
தமிழக முதல்வரின் கருணையும், மனிதாபிமானமும் மிக்க இந்த நடவடிக்கைக்கு, கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத்தில் 137 நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. அதுபோல, இந்தியாவிலும் மரண தண்டனை முற்றாக நீக்கப்படுவதற்கு வழி அமைக்கின்ற விதத்தில், இந்திய நீதித்துறையின் வரலாற்றில், இது ஒரு மகத்தான தீர்ப்பாக அமைந்து இருக்கின்றது' என தெரிவித்துள்ளார்.
வீரப்பன் கூட்டாளிகள் மீதும் கருணை தேவை:
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசையும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், வீரப்பன் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல நாட்களாகிவிட்டன. தற்போது தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையைப் பின்பற்றி அவர்களை விடுதலை செய்ய கர்நாடக முதல்வர் முன்வரவேண்டுமெனவும், இது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் உரிய வகையில் கர்நாடக முதல்வரை வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்''எனத் தெரிவித்துள்ளார்.
வரவேற்கப்பட வேண்டிய உத்தரவு:
இது குறித்து பா.ம.க நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜீவ் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட இந்த 7 பேரின் விடுதலை காலம் தாழ்த்தப்பட்ட ஒன்று என்ற போதிலும் வரவேற்கப்பட வேண்டியதாகும். இதே போல் பல்வேறு பொய் வழக்குகளில் 1989 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் கடந்த 25 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 65 வயதைக் கடந்த அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்''எனத் தெரிவித்துள்ளார்.
கி.வீரமணி பாராட்டு:
இதே போல், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மற்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் நமக்குக் கருத்து மாறுபாடுகள் உண்டு என்றாலும், சிறையில் 23 ஆண்டு காலம் வாடியவர்களை விடுதலை செய்யும் பிரச்சினையில் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு முழு வடிவம் கொடுத்து, உடனடியாக முடிவெடுத்து, முதலமைச்சர் செயல்படுத்தியது பாராட்டத்தக்கதாகும்''எனத் தெரிவித்துள்ளார்.