தோல்வி பயத்தால் போட்டியிடாமல் ஓடுகிறார் வைகோ... : எச்.ராஜா
சென்னை: தேர்தலில் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என வைகோவுக்கு பயம் ஏற்பட்டதாலேயே அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த வெள்ளியன்று தொடங்கியது. அதன்படி, மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக - மக்கள்நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கோவில்பட்டியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்வதாக இருந்தது.
ஆனால், திடீரென வேட்புமனுவைத் தாக்கல் செய்யாமல் திரும்பிய வைகோ, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.
வைகோவின் இந்த திடீர் முடிவு குறித்து மற்ற கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தேசிய செயலாளரும், சென்னை தி.நகர் பாஜக வேட்பாளருமான எச்.ராஜா கூறுகையில், "வைகோவுக்கு தேர்தலில் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. மக்கள் நலக்கூட்டணி என்பதே போலி அணி தான்' என அவர் தெரிவித்தார்.
தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபின், இவ்வாறு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழிசை கருத்து:
இதேபோல், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து கூறுகையில், "வைகோ குழப்பத்தில் இருக்கிறார் ; பழம் புளித்துவிட்டதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
வைகோ தேர்தல்களில் போட்டியிட்டது மிக மிகக் குறைவுதான். இதுவரை அவர் மொத்தமே 5 முறைதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். வைகோ முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது 1996ல்தான். அதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் அவர் மீண்டும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.