அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் திமுக நரித்தனம் செய்கிறது- வைகோ
10 ஆண்டு காலம் மத்திய அரசில் அதிகாரத்தில் இருந்த போது காவிரிக்காக கவலைப்படாத திமுக இப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல என வைகோ கூறியுள்ளார்.
சென்னை: அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் திமுக நரித்தனமும், நயவஞ்சகத்தனமும் செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி பிரச்சினை தொடர்பாக திமுக பொருளாளரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாளை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும், அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு அனுப்பி உள்ளார்.
இது குறித்து கருத்து கூறிய வைகோ, திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு ஏமாற்று வேலை. அரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படுவது. ஆகையால், அதில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் கருத்து வேறாக உள்ளது. நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம் என்று கூறினார். இதனால் வைகோ, திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் பேசுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மீண்டும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம் தலைவர்களுடன் பேசப் போவதாக கூறினார்.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம், தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பது போல கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளது. 10 ஆண்டு காலம் மத்திய அரசில் அதிகாரத்தில் இருந்த போது காவிரி நதிநீருக்காக கவலைப்படவில்லை.
காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்தது. இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் என்ற பெயரில் நயவஞ்சக செயலில் ஈடுபடுகிறது. தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலரை கட்சியில் இணைக்கப் போவதாக கூறிவிட்டு, கூடவே அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுவதா?
இது ஏமாற்று வேலை. இதில் மக்கள் நலக்கூட்டணியினர் பங்கேற்பது உசிதமில்லை. இதையேதான் திருமாவளவனும் நேற்று இரவு கூறினார். ஆனால் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக கூறியது தனக்கு தெரியாது என்றும் வைகோ தெரிவித்தார்.