வைகுண்ட ஏகாதசி கோலாகலம்.. தமிழகம் முழுக்க பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
Recommended Video

சென்னை: வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாது சொர்க்கவாசலில் நுழைந்து, ஆலயங்களில் தரிசனம் செய்தனர். கோவில்களில் "கோவிந்தா" கோஷங்கள் விண்ணை பிளந்தன.

மார்கழி மாதம் மூன்றாம் நாள், அதாவது டிசம்பர் 18ம் தேதி முதல் ‛பகல் பத்து' உற்சவம் துவங்கியது. நேற்றுடன் அது நிறைவடைந்த நிலையில், இன்று முதல், ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. எனவே, வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.
"மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன்" என்பது கீதையில் கண்ணன் கூறியது. எனவே சிறப்புமிகுந்த இந்த மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசியாக கருதப்படுவது ஐதீகம். எனவேதான் அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே பக்தர்கள் கடந்தால் மோட்சம் கிட்டும், பிறவி பெருங்கடலை கடக்கலாம் என்பது ஐதீகம்.

இன்று, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட அனைத்து வைணவ ஆலயங்களிலும் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பெங்களூரிலுள்ள புகழ்பெற்ற இஸ்கான் ஸ்ரீராதாகிருஷ்ணர் கோயில் மற்றும் தமிழகத்திலுள்ள இஸ்கான் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா பக்தியோடு கொண்டாடப்பட்டது.
கோயில்களில் ஏராளமான மக்கள் பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். "கோவிந்தா.. கோவிந்தா" என்ற பக்தி பரவசத்துடன் பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது.












Click it and Unblock the Notifications