எவன் சொன்னது நான் ஓ.பி.எஸ் அணிக்கு தாவப் போறேன்னு... 'விளாசும்' வளர்மதி
ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் இணையப் போவதாக வெளியான தகவலை அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் இணையப் போவதாக வெளியான தகவலை அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்த போதும், அதற்கு அடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்று தனியாக ஒரு அணியாக செயல்பட்ட நேரத்திலும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுடனேயே இருந்தவர் வளர்மதி. அதிமுகவின் முன்னாள் அமைச்சரான இவர், சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை அடைந்தார்.

ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்படுத்திய பிப்ரவரி புரட்சியின் போது அந்த அணிக்கு எதிராக மீடியாக்களிடம் சசிகலாவிற்கு ஆதரவாக வெளுத்து வாங்கினார் வளர்மதி. இந்நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் வகையில் ஓ.பிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சசிகலா அணியில் இருந்து விலகி பன்னீர்செல்வம் அணிக்கு வளர்மதி தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மாநிலப் பேச்சாளர்கள் பயண விவரத்தில் அதிகமாக மூக்கை நுழைத்தாக வளர்மதி மீது புகார் அளிக்கப்பட்டதாகவும், இதன்படி வளர்மதியிடம் தினகரன் விசாரணை நடத்தியதாகவும் கட்சி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. மூத்த உறுப்பினரான தம்மிடமே விசாரணையா என்று மனம் நொந்த வளர்மதி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவ தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து "ஒன் இந்தியா தமிழ்" வளர்மதியிடம் விளக்கம் கேட்டது. அப்போது பேசிய அவர்,"நான் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போகிறேன் என்று பேட்டியோ, அறிக்கையோ கொடுத்தேனா?. எந்த அடிப்படையில் இப்படி ஒரு தகவல் வெளியாகிறது" என்று எரிச்சலடைந்தார்.
மேலும் "வேண்டுமென்று திட்டமிட்டே என்னுடைய மாண்பை குறைப்பதற்காக இந்த சதியை செய்கிறார்கள். என்னை கடுப்பேத்துவதற்காகவே எவனோ எனக்கு எதிராக சதி செய்கிறான், சதிசெய்கிறவனை நினைத்தால் எனக்கு கோபமாக வருகிறது" என்று கொந்தளித்தார் வளர்மதி.












Click it and Unblock the Notifications