என்னை நக்ஸலைட்டுன்னு சொன்னப்ப சிரிப்புதான் வந்தது - மாணவி வளர்மதி Exclusive
நோட்டீஸ் விநியோயகம் செய்ததற்காக என்னை கைது செய்து நக்ஸலைட் என்று சொன்னபோது கோபம் வரவில்லை சிரிப்புதான் வந்தது என மாணவி வளர்மதி கூறினார்.
சென்னை: என்னை நக்ஸலைட் என்று சொன்னபோது கோபம் வரவில்லை சிரிப்புத்தான் வந்தது என குண்டர் சட்டத்தில் கைதாகி, விடுதலையான வளர்மதி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறினார்.
நெடுவாசலில் ஹைட்ரோ திட்டத்தை எதிர்த்து போராடுவதற்காக, சேலம் அரசு மகளிர் கல்லூரியில் நோட்டீஸ் விநியோகம் செய்ததற்காக குண்டர் சட்டத்தில் கைது மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றம் அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கியது. நக்ஸலைட் என்று சொல்லப்பட்ட மாணவி வளர்மதி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
நம்மில் பலர் மாவோயிஸ்ட், நக்ஸலைட் என்ற வார்த்தைகளை தெரிந்திருக்கிறோம். ஆனால், யார் இவர்கள்? இவர்கள் என்ன செய்கிறார்கள்? நல்லவர்களா, கெட்டவர்களா என்கிற புரிதல் இல்லை.
நக்ஸலைட், மாவோயிஸ்ட் என்றால் மிகப் பெரிய பயங்கரவாதிகள்,மக்களுக்கு தீங்கு செய்கிறவர்கள் என்ற கருத்தை அரசு மக்கள் அனைவரிடத்திலும் விதைத்துவிட்டது. ஆனால் அரசு சொல்வது உண்மையா பொய்யா என்பதை தெரிந்துகொள்ளவாவது யார் இவர்கள் என தெரிந்துகொள்வது அவசியம்.
எழுத்தாளர் அருந்ததிராய்
எழுத்தாளர் அருந்ததி ராய் எழுத்துக்கள் மூலம் நக்ஸலைட்டுகள் குறித்து படித்து தெரிந்துகொண்டேன். ஒருமுறை ஆந்திரா-ஒடிஸா எல்லையில் 32 மாவோயிஸ்டுகளை என்கவுண்டரில் கொலை செய்தார்கள்.
நக்ஸல், மாவோயிஸ்ட் யார்?
அதுகுறித்த உண்மை அறியும் குழுவில் நான் சென்றிருந்தேன். கொல்லப்பட்டவர்களில் 10 பேர் அப்பாவி பழங்குடி மக்கள். நான் மக்களிடம் இருந்துதான் மாவோயிஸ்டுகள் யார், நக்ஸலைட்டுகள் யார் என்பதை தெரிந்துகொண்டேன்.
ஆயுத வழியில் நான் போராடவில்லை
என்னை மவோயிஸ்ட், நக்ஸலைட் என்று சொன்னபோது, நான் அந்தளவுக்கு சட்ட திட்டங்களை மீறி செயல்படுகிற ஆள் இல்லை என்றுதான் சொல்ல தோன்றியது. மாவோயிஸ்டுகளும் நக்ஸலைட்டுகளும் சட்ட திட்டங்களை மீறி ஆயுத வழியில் மக்களுக்காக போராடுகிறவர்கள்.
நான் நக்ஸல்?
நான் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அறவழியில் போராடுகிற ஒரு சாதாரண மாணவி. என்னை நக்ஸலைட் என்றதும் எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது.
அரசைக் கற்ருக்கொண்டேன்
அரசு குறித்தும் அரச பயங்கரவாதம் குறித்தும் நான் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தில் சேர்ந்த கொண்ட பிறகுதான் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு தான் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராட ஆரம்பித்தேன். இவ்வாறு வளர்மதி கூறினார்.