தட்டிக் கேட்க விரும்பும் மக்களின் பிரதிநிதியாக காங். இருப்பதை பாஜக விரும்பவில்லை- ஜி.கே.வாசன்
ஈரோடு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் தவறுகளை சுட்டி காட்டவும், தட்டி கேட்கவும், கண்டிக்கவும் நாட்டில் எதிர்கட்சி வேண்டும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பா.ஜ.க. தங்களின் செயல்களை தட்டி கேட்க எதிர்கட்சி இருக்க கூடாது என திட்டமிட்டு செயல்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். இதனை ஒருபோதும் இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இலங்கை ராணுவம் மீனவர்களின் 63 படகுகளை சிறைபிடித்து நீண்ட நாட்கள் ஆகியும் விடுவிக்கவில்லை. இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவர் படகுகளை ஒப்படைக்க முடியாது என கூறியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.
மீனவர் பிரச்சினை தொடர்பாக வருகிற 29-ந்தேதி டெல்லியில் மத்திய மாநில அரசு அதிகாரிகள், இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர சுமூக தீர்வு காணவேண்டும்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இதில் காங்கிரசுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டினை காங்கிரஸ் பேணி பாதுகாத்து வருகிறது. ஆனால் தேர்தலில் தங்களுக்கு கிடைத்த ஆதரவினை மதவாத கொள்கைகளுக்கு கிடைத்த ஆதரவாக பா.ஜ.க. எண்ணி விட கூடாது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் பலமான இயக்கமாக உருவாகும்.
பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. மொத்தத்தில் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் அளிக்காத அரசாக இருக்கிறது. விலைவாசியும் உயர்ந்து விட்டது.
நான் தனிக்கட்சி தொடங்குவதாக வரும் செய்திகள் தவறானவை. தவறான செய்திகளுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றார் வாசன்.