ஆர்.கே.நகரில் வசந்தி தேவி, சிம்லா முத்துச்சோழன் வேட்புமனு தாக்கல்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வசந்தி தேவி, திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் ஆகியோர் இன்று தங்களின் வேட்புமனுக்களை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம்தேதி தொடங்கியது.

இந்த தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 25ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணி சார்பில் இதே தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான வசந்திதேவி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வந்திருந்த வசந்திதேவி, தொகுதி தேர்தல் அலுவலரான பத்மஜா தேவியிடம் தனது வேட்பு மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்திதேவி, ஆர்.கே.நகர் தொகுதி ஏழைகள் வசிக்கும் பகுதியாகும். கடந்த பல ஆண்டு காலமாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் எந்தவித நன்மையும் செய்யவில்லை. நான் முதல்வர் ஜெயலலிதாவை மட்டும் எதிர்த்து போட்டியிடவில்லை. பல வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர் என்று கூறினார்.
இதேபோல ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன் இன்று பிற்பகலில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 29தேதி கடைசி நாள் ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30ம்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற மே 2ம்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் தேர்தலில் யார் யார் போட்டியிடுவார்கள் என்ற விபரங்கள் தெரியவந்து விடும்.












Click it and Unblock the Notifications