"அரசியல் ஜோக்கர்.. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.." அண்ணாமலை குறித்து கேட்டதும் திருமாவளவன் அட்டாக்
சிதம்பரம்: அரசியலமைப்பு சட்ட நாள் தின விழாவில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், பாஜகவையும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் கடுமையாக விமர்சித்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 73ஆவது இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் தின விழா பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவசர அவசரமாக.. திருமாவளவன் மேடையில் ஓடிவந்து சொன்னாரே.. இப்படி பாஜகவில் செய்வீங்களா: டாக்டர் ஷர்மிளா
திருமாவளவன்
மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன், பதிவாளர் சீதாராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலில் சாஸ்திரி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசியலமைப்பு சாசனம் பற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு விஷயங்களும் குறித்தும் விரிவாகப் பேசினார்.
அரசியலமைப்பு சட்ட நாள்
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "இன்று அரசியலமைப்பு சட்ட நாள்.. ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களும் நினைவு கூர்ந்து பெருமைப்பட வேண்டிய நாள் இது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளைப் பாதுகாக்கக் குடிமக்களாகிய நாம் ஒருவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் இது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள் இது. இந்த நாளில் அரசியலமைப்பு சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தின் வழியாக ஜனநாயகத்தையும் சமூக சமத்துவத்தையும் நிலைநாட்ட நாம் உறுதி ஏற்போம்.
உரிமை உண்டு
அரசியல் கட்சியாக உள்ள அனைவரும் எல்லா தொகுதிகளும் போட்டியிட உரிமை உண்டு.. சிதம்பரம் தொகுதி அனைத்து கட்சியினரும் போட்டியிடும் தொகுதி தான்.. இதில் பாஜகவும் போட்டியிடலாம்.. எங்களுக்கு எந்த ஒரு சங்கடமும் இல்லை.. எங்களின் கொள்கை பகைவர்களை அரசியல் களத்தில் தேர்தல் களத்தில் எப்படி எதிர்கொள்வோமோ அப்படி எதிர் கொள்வோம். தமிழ்நாட்டில் பாஜகவைத் தனிமைப்படுத்தித் தேர்தலை எதிர்கொள்வது என்கிற அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.. இந்திய அளவிலும் அதை விரிவுபடுத்துவோம்..
அரசியல் ஜோக்கர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவைத் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.. திமுகவைத் தொடர்ந்து குறிவைத்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.. ஆனால் அது மக்களிடத்தில் எடுபடவில்லை.. பொதுமக்கள் அவரை தற்போது அரசியல் ஜோக்கராகவே பார்த்து வருகின்றனர்..
முடிந்தால் நிரூபிக்கட்டும்
பேனர் விவகாரத்தில் அதிமுகவினர் ஆதாரம் இல்லாமல் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.. ஆதாரத்துடன் அவர்கள் புகார்களை முன் வைக்கட்டும்.. அப்படி ஆதாரத்துடன் முன்வைத்தால் ஆளும் திமுக அரசு அதற்கு முறைப்படி பதில் தரும் என்பதை நான் நம்புகிறேன்.. ஆதாரம் இருந்தால் அவர்கள் சட்டப்படி அனைத்தையும் செய்யட்டும். அரசின் மீது உள்ள குற்றச்சாட்டுகளை உண்மை என்றால் எதிர்க்கட்சியினர் நிரூபிக்கட்டும்.
தேர்தல் முக்கியமில்லை
எங்களுக்கு தேர்தல் முக்கியமில்லை. திமுக கூட்டணி தேர்தலை முன்வைத்து ஏற்பட்ட கூட்டணி இல்லை. எங்களுக்குத் தேர்தல் முக்கியமல்ல.. மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்கும் வகையிலேயே நாங்கள் களப்பணிகளை ஆற்றி வருகிறோம்.. தேர்தல் வரும்போது, அதற்கான பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும்.. தற்போதைய நேரத்தில் தேர்தல் குறித்துப் பேசவும் நடவடிக்கை எடுக்கவும் அவசியம் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.