கன மழை...லேட்டாக பேசத் தொடங்கிய தலைவர்கள்.. விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு பாதியிலேயே முடிந்தது!
சேலம்: சேலத்தில் நேற்று நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிணன் கல்வி உரிமை மாநாடு கன மழை மற்றும் தலைவர்கள், பேச்சாளர்கள் மிகத் தாமதமாக பேசியது ஆகியவை உள்ளிட்ட காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
பெரும் போராட்டங்கள், வழக்குகளுக்குப் பின்னர் நேற்று சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்வி உரிமை மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டையொட்டி லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் சேலத்தில் குழுமினர். மாநாட்டை கட்சித் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்துப் பேசினார்.
முதலில் மாநாட்டை இரவு 10 மணி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பேச்சாளர்கள் இரவு 8.30 மணிக்குத்தான் பேசவே தொடங்கினர். இதனால் நேர அவகாசம் குறைந்து போய் விட்டது. அதேசமயம், பேச்சை் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது.
இந்த நிலையில், இரவு 9.30 மணி அளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் ஊருக்குத் திரும்ப முடியவில்லை. இந்த மழையால் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.