தேர்தல் உள்குத்து... நிர்வாகிகள் பட்டியல் கேட்ட திருமாவளவன்- மநகூவில் விசிகவும் வெளியேறுகிறது?
சென்னை: சட்டசபை தேர்தலின்போது வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத கட்சி நிர்வாகிகளின் பட்டியலை கேட்டுள்ள விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அதன்படி நட வடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார். 2019ம் லோக்சபா தேர்தல் வரை மக்கள் நலக்கூட்டணி நீடிக்கும் என்று பேசி வந்த திருமாவளவன் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் நலக்கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, திடீரென்று கூட்டணி ஆட்சி என்று முழக்கமிட்டு திமுகவை விட்டு வெளியேறியது. கம்யூனிஸ்ட்கள், மதிமுக உடன் இணைந்து புதிதாக மக்கள் நலக்கூட்டணி உருவானது.
இந்த கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது, பின்னர் தமாகாவும் இணைந்தது. மக்கள் நலக்கூட்டணியில் வைகோ இணைந்த போதோ அந்த கட்சியில் இருந்து நிர்வாகிகள் சிலர் வெளியேறினர். அதேபோல தேமுதிகவில் இருந்தும் தமாகாவில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.
சட்டசபை தேர்தலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் சீட் கிடைக்கும் என்று நினைத்து அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கணக்கில்தான் திருமாவளவன் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததாக சொல்லப்பட்டது.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிகவும், தமாகாவும் இணையவே, 25 தொகுதி களில் மட்டுமே போட்டியிடக் கூடிய நிலைக்கு விசிக தள்ளப்பட்டது. இந்த கூட்டணியை அந்த கட்சிகளில் உள்ள தொண்டர்களினாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. எனவேதான் ஆள் ஆளுக்கு உள்ளடி வேலை செய்து வேட்பாளர்களை தோல்வியடைய வைத்தனர்.
விசிக போட்டியிட்ட 25 இடங்களிலும் பரிதாப தோல்வியை தழுவியது. 25 தொகுதிகளிலும் விசிகவுக்கு மொத்தம் 0.8 சதவீதம் வாக்குகளே கிடைத்தன. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் காட்டுமன்னார்கோயிலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தோல்விக்கான காரணங்கள் குறித்து விசிக தொகுதிச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்களுடன் திருமாவளவன் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் கட்சிக்காரர்கள், கூட்டணி கட்சியினர் பலர் உரிய ஒத்துழைப்பு தராததால்தான் தோற்க நேர்ந்தது என்று வேட்பாளர்கள் சொல்லவே, அது தொடர்பான விவரத்தை அளிக்குமாறு திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசிக தோல்வி குறித்து சென்ற வாரம் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை செய்தார். உட்கட்சி பிரச்சினைதான் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று பலரும் கூறினார்கள். கூட்டணி குறித்து ஒரு சிலர் விமர்சனங்களை முன் வைத்தனர்.
சீட் கிடைக்கவில்லை என்பதால் ஒத்துழைக்காதது, தனித் தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் விசிக நிர்வாகிகளின் உறவினராக இருந்த நிலையில் மறைமுகமாக அவர்களுக்காக வேலை செய்தது போன்ற காரணங்களை வேட்பாளர்கள் கூறினர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான புகார்களை எழுதி பட்டியலாகத் தர வேண்டும் என்று திருமாவளவன் உத்தரவிட்டார். அதன்பேரில், உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் உறுதியாகும்பட்சத்தில், சம்பந்தப் பட்ட மாவட்டம் மற்றும் தொகுதி களின் நிர்வாகிகளுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை கூட்டணி தொடர விருப்பம் என்றார் திருமாவளவன். ஆனால், உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விசிக வெளியேற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருமாவளவன் இதுவரை இந்த தகவலை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் வெளியேறப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் விசிகவும் விரைவில் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் அந்த கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதிமுகவும் அடுத்து என்ன நிலையை எடுக்கும் என்பதே இப்போது அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாகும்.