தூத்துக்குடி மக்களுக்கு வேதாந்தா ரூ.750 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் அதிரடி மனு
மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ரூ.750 கோடி வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி மக்கள் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். 100 வது நாள் போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த விஜய் நிவாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட ஆலைகளைச் சீர் செய்ய வேதாந்தா நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.