69% இட ஒதுக்கீடு- செப். 30ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: கி.வீரமணி
சென்னை: 69% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து வரும் 30-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கல்வியிலும், உத்தியோகங்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட வர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என்று பெரும்பான்மையான (சுமார் 85 விழுக்காடு மக்கள் தொகை) உள்ள மக்களுக்கு, இடஒதுக்கீடு கடந்த1980 முதல் சுமார் 34 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.
1992இல் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுலாக்கிய போது, அந்த வழக்கில் (இந்திரா சகானி வழக்கு) 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடு மிகக் கூடாது பொதுவாக; ஆனால் பல்வேறு நிலைகளில் இதற்கு விதி விலக்காகவும் - பல நியாயமான காரணங்களால் கூடுதலாகவும் தரப்படலாம் என்று 9 நீதிபதிகளின் தீர்ப்புரைகள் பல்வேறு அம்சங்களில் சிலர் தனித்தனி தீர்ப்புக்கள் தந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சட்டமாக இடஒதுக்கீடு
அதைக் காட்டி இங்குள்ள இடஒதுக்கீட்டை அடியோடு ஒழிக்க விரும்பிய பார்ப்பன மற்றும் முன்னேறிய பார்ப்பனரல்லாத ஜாதியினர் இதற்கு எதிராக முயற்சிகள் செய்யப்பட்டபோது, திராவிடர் கழகத்தின் யோசனை - வேண்டுகோளை ஏற்று, அப்பொழுது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இதுவரை வகுப்பு வாரி உரிமை இடஒதுக்கீடு வெறும் அரசு ஆணையாக இருந்த நிலையை மாற்றி, சட்டமன்றத்தில் ஒரு தனிச் சட்டத்தையே இயற்றி!, அதனை (31சி பிரிவின் கீழ்) அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணைப் பாதுகாப்பின் கீழ், இந்திய அரசியல் சட்டத்தின் 76வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் (1994) கொண்டு வந்து நிறைவேற்றி கடந்த 20 ஆண்டுகளாக இது அமுலில் உள்ளது.

திட்டமிட்ட வழக்கு
இதனை எதிர்த்து திட்டமிட்டே உச்சநீதிமன்றத்தில் சில உயர்ஜாதி அமைப்புகள் வழக்குப் போட்டன. உச்சநீதிமன்றத்தில் ஜஸ்டீஸ் கபாடியா தலைமை நீதிபதியாக இருந்தபோது அந்த அமர்வு இந்த வழக்கினைத் தள்ளுபடி செய்து, 69 சதவிகித ஆணை செல்லும் என்று தீர்ப்பளித்தது.

மீண்டும் தள்ளுபடி
மறு ஆய்வு மனுவை, இதே உயர்ஜாதி அமைப்புகளின் வழக்குரைஞர் போட்ட போதும் தள்ளுபடி செய்தார். மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் இடம் கிடைக்காத சில மாணவிகளை வைத்து வழக்குப் போடுவதும் சில இடங்களைப் பெறுவதும் வாடிக்கையான வேடிக்கை ஆகிவிட்டது.

இதற்கு என்ன பதில்?
இந்த 69 சதவிகிதச் சட்டம் அமுலில் இருப்பதால்தான் எனது கட்சிக்காரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற வாதம் எடுத்து வைக்கப்படுகிறதே, அத்தகையவர்களைப் பார்த்துக் கேட்க விரும்புகிறோம்; 50 விழுக்காடு என்று இடஒதுக்கீடு இருந்தால் அப்போதும் சிலருக்கு அல்லது பலருக்கு இடம் கிடைக்காமல் போகக் கூடும் அல்லவா? அதற்கு நிரந்தர பரிகாரம் இடங்களை மொத்தத்தில் அதிகப்படுத்தி, அனைத்து மக்களுக்கும் விகிதாச்சார அளவில் இடஒதுக்கீட்டுக்கு வழி செய்வது தானே?

2 வார அவகாசம்
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

முதல்வருக்கு கூடுதல் அக்கறை
இன்றுள்ள தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சர்தான், இந்த 69 சதவிகிதச் சட்டமாக பாதுகாப்புடன், இருக்க முயற்சி செய்த சாதனை படைத்தவர் என்பதால், இதில் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்தி, உச்சநீதிமன்றத்தில் தக்க வழக்குரைஞர்களைக் கொண்டு வாதாடி சட்டப்படி 69 சதவிகித இடஒதுக்கீடுச் சட்டம் செல்லும் வகையில் இறுதியான முடிவை ஏற்படுத்த வேண்டும்.

69% இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்
இது தமிழக அரசின் பொறுப்பு மட்டுமே என்று மற்ற கட்சியினர் - அவர்கள் எதிர்க்கட்சியினராக பல்வேறு கருத்துக்களில் தமிழக ஆளுங்கட்சிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களாக இருப்பினும் - இந்த சமூக நீதி இடஒதுக்கீட்டு பிரச்சினையில் ஒன்றுபட்டு குரல் கொடுத்து, 69 சதவிகித சட்டத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

மக்கள் கருத்து
9ஆம் அட்டவணை பாதுகாப்பைக்கூட உடைக்கும் வண்ணம் நீதித்துறையில் நிகழ்ந்துள்ள நியாயமற்ற தீர்ப்புகளைப் பற்றியும்கூட ஒருமித்த மக்கள் கருத்தை நாம் திரட்டியாக வேண்டும்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
இதற்காக அவசரமாக நாம் ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப்பினர்களை சென்னையில் பெரியார் திடலில் வருகின்ற 30.9.2014 அன்று அழைத்து (காலை 10.30 மணிக்கு) ஒரு பொதுக் கருத்து கருதி, சமூக நீதிப் பாதுகாப்பு அணியின் கலந்துரையாடலை நடத்திட வேண்டும் என்று பல கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பிட முனைந்துள்ளோம்.
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வை எப்போதும் ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை மூலம் ஏற்படுத்திடுவது நமது உயிர்க் கடமையாகும்.
இவ்வாறு கி. வீரமணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications