வேட்பாளர் தேர்வு.. சேலத்தில் திமுகவினரிடையே கோஷ்டி மோதல்: கைகலப்பு பதற்றம்
சேலம்: சேலத்தில் அண்ணா சிலைக்கு திமுக வேட்பாளர்கள் மாலை அணிவிக்க வந்த போது இரண்டு கோஷ்டி தொண்டர்களிடையே மோதல் வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆதரவாளர்களிடையே நடந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபைத் தொகுதியில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 3 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ள நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் புதனன்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி பூசல் தடுக்கும்வகையில் பட்டியல் தயார் செய்யப் பட்டிருப்பதாக திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்ட திமுகவை பொருத்தவரை மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா என்கிற ராஜேந்திரன், வழக்கறிஞர் ராஜேந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய மூவரும் தனிதனி கோஷ்டியாக இயங்கி வந்தனர்.
சேலம் மத்திய மாவட்டம், கிழக்கு, மேற்கு ஆகிய 3 மாவட்டங்களாக பிரித்து, மூவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை திமுக தலைமை அளித்தது. வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரன், வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் பல நேரங்களில் நேரடி மோதலில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்தது.
இந்த நிலையில் சேலம் மேற்கு தொகுதிக்கு பன்னீர்செல்வம், வடக்கு தொகுதிக்கு வழக்கறிஞர் ராஜேந்திரன், தெற்கு தொகுதிக்கு குணசேகரன், வீரபாண்டி தொகுதிக்கு ராஜா என்கிற ராஜேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆளுங்கைக்குட்பட்ட மேற்கு தொகுதி வீரபாண்டி ராஜேந்திரன் ஆதரவாளரான பன்னீர்செல்வத்துக்கும், கிழக்கு மாவட்டத்தில் ராஜேந்திரன் ஆதரவாளரான அம்மாசியும் வேட்பா ளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய இடங்களில் வீரபாண்டி ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதால், அவரின் கை ஓங்கியுள்ளதாக திமுக தொண்டர்களிடையே கருத்து எழுந்துள்ளது.
இதனிடையே இன்று நான்கு வேட்பாளர்களும் பிரச்சாரத்திற்கு முன்பாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களுக்கும் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது. அப்போது அங்கு வந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
சேலத்தில் இரு துருவங்களாக உள்ள வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரனும் வழக்கறிஞர் ராஜேந்திரனும் தேர்தலில் போட்டியிடுவதால் கோஷ்டி மோதலுக்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றக்கோரி ஆர்பாட்டம் ஒருபக்கம், கோஷ்டி மோதல் மறுபக்கம் என திமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.