வீரப்பன் 10வது நினைவு நாள்... மேட்டூர் சமாதியில் ஆதரவாளர்கள் அஞ்சலி
மேட்டூர்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் 10வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மேட்டூர் மூலக்காட்டில் உள்ள அவரது சமாதியில் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக அதிரடிப்படையினரால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிரடியாக நடந்த இந்த என்கவுண்டரின்போது தமிழக அதிரடிப்படைத் தலைவராக விஜயக்குமார் இருந்தார். அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா.
நேற்று வீரப்பனின் 10வது ஆண்டு நினைவு தினமாகும். நேற்றுதான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி பெங்களூர் சிறையிலிருந்து வீடு திரும்பினார்.
வீரப்பனின் உடல் மேட்டூர் மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் சமாதியாகவும் அது திகழ்கிறது. அந்த இடத்திற்கு வருடா வருடம் அவரது ஆதரவாளர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். நேற்றும் அதுபோல ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சியினர் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்த வந்தவர்களை கியூ பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.