இனவெறி சிங்கள போலீஸ்.. யாழ் தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொலைக்கு வேல்முருகன் கண்டனம்
சென்னை: யாழ்ப்பாணத்தில் 2 தமிழ் மாணவர்களை, சிங்கள போலீஸார் சுட்டுக் கொன்ற செயலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரை சிங்கள காவல்துறை சுட்டுப் படுகொலை செய்திருக்கும் செய்தி வேதனையைத் தருகிறது.
இனவெறியுடன் மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்துவிட்டு வாகன விபத்தில் அவர்கள் உயிரிழந்ததாக கதைகட்டி இருக்கிறது சிங்கள காவல்துறை. ஆனால் பொதுமக்கள் துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதாக கூறியதால் தற்போது உண்மை அம்பலமாகி இருக்கிறது.
தமிழ்ச் சமூகத்தின் இளங்குருத்துகளை இனவெறியுடன் கொலை செய்த சிங்கள காவல்துறையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழீழ விடுதலைக்கான குரல் ஓய்ந்து போய்விடவில்லை என்பதை யாழ்ப்பாணத் தமிழர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய அடக்குமுறைகளை சிங்கள காவல்துறை ஏவிவிடுகிறது. அண்மையில் தமிழீழத் தலைநகரான திருகோணமலையில் தமிழர்களை அச்சுறுத்தும் ராணுவ பயிற்சியை நடத்தியது.
இப்போது தமிழீழத்தின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தில் அப்பாவி மாணவர்களை நரவேட்டையாடியுள்ளது சிங்களம். தொடரும் சிங்கள இனவெறி ஒடுக்குமுறையில் இருந்து தமிழீழ தேசம் விடுதலை பெற வேண்டியதின் அவசியத்தை இத்தகைய இனவெறிப் படுகொலைகள் உறுதி செய்கின்றன.
சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்துக்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பும் தமிழீழ மக்களுக்கு தாய்த் தமிழகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும். சிங்களத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களுக்கும் தாய்த் தமிழகம் உறுதுணையாக இருக்கும்.
தமிழீழத் தமிழர்களை அச்சுறுத்தி அரச பயங்கரவாதத்தை ஏவிவிடும் சிங்கள பேரினவாத அரசை இந்திய மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.