பிரபல கல்வி நிறுவன அதிபருக்கு தலைமறைவு 'வேந்தர் மூவிஸ்' மதன் கடிதம்
சென்னை: புதுச்சேரி கோடீஸ்வரர் ராஜகோபால் நடத்திவரும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'நான் கொடுத்த லிஸ்ட் படி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்' என்று மாயமான வேந்தர் மூவிஸ் மதன் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் வேந்தர் மூவிஸ் லெட்டர் பேடில் எழுதிய கடிதம் வாட்ஸ் அப்பில் பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேந்தர் மூவிஸ் மதன் தனது லெட்டர் பேட் பேப்பரில், காசியில் கங்கையில் சமாதி அடையப் போகிறேன் என்று கடிதம் எழுதி அதனை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுவிட்டு தலைமறைவானார். கடந்த மாதம் 29ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டதாக கூறப்படும் நிலையில் இதுவரை மதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
தனது கடிதத்தில், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தன் மூலம் வந்த மாணவர்களுக்கு சீட் கொடுக்கவேண்டும் என்றும் அவர்களிடம் முழுமையாகப் பணம் வாங்கி, அந்தப் பணத்தை உரியவர்களிடம் கொடுத்தும் விட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
மதன் மாயமானதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மதனைக் கண்டுபிடித்துத் தருமாறும் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிகையை எடுக்கவேண்டும் என்றும் புகார் மனுக்கள் அளித்தனர்.
இதனையடுத்து எஸ்.ஆர்.எம். நிறுவனங்களின் தலைவரும் ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர், மதன் குறித்து அறிக்கைகள் வெளியிட்டார். அவற்றில் தனக்கும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்றும் மதன் எங்களது பெயரை பயன்படுத்தி பணமோசடி செய்துள்ளார் என்றும், அவர் ஐ.ஜே.கே. கட்சியில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த, ஸ்ரீ பாலாஜி கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மருத்துவம்,பொறியியல் கல்லூரிகள் நடத்திவரும், ராஜகோபால் என்பவருக்கும் மதன் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நான் கொடுத்த மாணவர்கள் லிஸ்ட் படியே சேர்க்கை நடக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளாராம். இந்த தகவல் தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது.
ராஜகோபால் நடத்தும் கல்லூரியில் ஒரு மருத்துவ சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார்கள் வந்ததையடுத்து, கடந்த 24ம் தேதி, வருமானவரித்துறை அங்கு சோதனை நடத்தி ரூ.52 கோடிகளைக் கைப்பற்றியது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ராஜகோபாலுக்கு மதன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பிரபல தனியார் கல்லூரிகளுக்கும், மதன், மாணவர் சேர்க்கை ஏஜென்ட் வேலை செய்துவந்தார் என்று செய்திகள் வெளிவந்திருந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் புதுச்சேரி ராஜகோபாலுக்கும் மதன் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.