சொகுசு கார் இறக்குமதி வழக்கு: வெங்கடாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன்.. சிபிஐக்கு குட்டு!
சென்னை: சொகுசு கார் இறக்குமதி வழக்கில் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் கஸ்டம்ஸ் அதிகாரிகளை விசாரிக்கத் தவறியதாக சிபிஐயைக் கண்டித்தார் நீதிபதி கர்ணன்.
நான்கு தினங்களுக்கு முன் கைதான வெங்கடாச்சலம், ஜாமீன் கோரி சென்னையில் உள்ள முதன்மை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வெங்கடாசலம் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.சந்திரசேகரன் ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு, வெங்கடாசலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ரூ.50,000 உத்தரவாதமும், அதே தொகையில் இரு அரசு ஊழியர்கள் ஜாமீனும் வழங்க வேண்டும்.
மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மே 17-ஆம் தேதி முதல் தொடர்புடைய காவல் நிலையத்தில் காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு மனுதாரர் ஆஜராக வேண்டும். அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சிபிஐக்கு குட்டு
ஜாமீன் வழங்கும் முன் இந்த வழக்கில் சிபிஐ செயல்பாடு குறித்து நீதிபதி கர்ணன் கூறுகையில், "இந்த சொகுசு கார்கள், சுங்கத் துறை மூலமாகத்தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. குறைவான வரி செலுத்தப்பட்டது என்றால், அப்படி குறைவாக வரி விதித்த சுங்கத் துறை அதிகாரிகளை அல்லவா சிபிஐ முதலில் விசாரித்திருக்க வேண்டும்?
குறைவான வரியைச் செலுத்தியிருக்கிறார்கள் என்றால், மீதி வரியைச் செலுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படியும் வரி செலுத்தத் தவறியிருந்தால் மட்டுமே கைது செய்திருக்க வேண்டும்.
இந்த வழக்கில் வெங்கடாச்சலத்தைக் கைது செய்திருப்பது தேவையற்றது. அவர் ஆவணங்களை மோசடியாக தயாரிக்கவோ, வரிகளைச் செலுத்தத் தவறவோ இல்லை. என்ன வரி விதிக்கப்பட்டதோ அவற்றைச் செலுத்தியிருக்கிறார். இதில் கைதுக்கு அவசியம் என்ன?," என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.