சசிகலா மீதான களங்கத்தை துடைக்கவே ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்டேன்- வெற்றிவேல்
சசிகலா மீதா களங்கத்தை துடைக்கவே ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டேன் என்று வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை : சசிகலா மீதான களங்கத்தை துடைக்கவே ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டேன் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்தார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோக்களை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை வெளியிட்டார். இது தேர்தல் விதிமீறல் என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வீடியோ சசிகலாவின் அனுமதி இல்லாமல் வெளியிட்டு வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ குறித்து சன் நியூஸ் செய்திக்கு வெற்றிவேல் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், சசிகலா மீதா களங்கத்தை துடைக்கவே ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டேன். மருத்துவமனையில் ஜெயலலிதா எப்படி இருந்தார் என்பது அமைச்சர்களுக்கு தெரியும்.
ஜெயலலிதா வீடியோவை சசிகலா, தினகரன் சொல்லி நான் வெளியிடவில்லை என்று சத்தியமாக சொல்கிறேன். மோசடியான வீடியோவை வெளியிட்டுவிட்டு ஓடி விட முடியாது. ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடைபெறும்போது வீடியோவை வெளியிட்டால் என்ன தவறு.
ஜெயலலிதா குறித்து நான் வெளியிட்ட வீடியோ முற்றிலும் உண்மையானதுதான். இதில் எந்த வித வீடியோ எடிட்டிங்கும் செய்யவில்லை என்றார் வெற்றிவேல்.