வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி மனதைப் புண்படுத்தி விட்டார்கள்... விஜய் வேதனை
சென்னை: நான் வருமான வரியை ஏய்ப்பு செய்து விட்டதாக பொய்யான செய்தியை பரப்பி எனது மனதைப் புண்படுத்தி விட்டார்கள். இந்த செய்தியால் நான் பெரும் வேதனை அடைந்துள்ளேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
புலி பட ஹீரோ நடிகர் விஜய், கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரது இல்லங்கள், அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் நூற்றுக்கணக்கான கோடி அளவுக்கு பணம் சிக்கியதாகவும், விஜய் 5 வருடமாக வரியே கட்டாமல் ஏய்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இவை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும் முறையாக வரி கட்டியுள்ளதாகவும் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
வழக்கமான சோதனை
வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று.
வரி ஏய்ப்பு செய்தேனா?
கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா? என்று சோதனையிட்டார்கள்.
முழு ஒத்துழைப்பு அளித்தோம்
நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம்.
பொய்யான செய்தியால் மன வேதனை
ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
சட்டத்தை மதிப்பவன்
மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன்.
முறையாக அனைத்து வரிகளையும் கட்டியுள்ளேன்
நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
மனதைப் புண்படுத்தாதீர்கள்
மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்றார் விஜய்.