சிங்கப்பூர் அப்படி, இந்தியா ஏன் இப்படி? அரசியல் பரபரப்பை கிளப்பிய விஜயின் ஜிஎஸ்டி 'பஞ்ச்'!
சென்னை: நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளன.
மெர்சல் என்ற பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது என்று கூறி தொடரப்பட்ட வழக்கு, படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தெரிவித்த எதிர்ப்பு என தடைகளை தாண்டிய பிறகுதான் வெளியானது விஜய் நடித்த மெர்சல் திரைப்படம்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் காரணமாக இப்போது, அரசியல் ரீதியாகவும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. சர்ச்சைகள் விஜயை சுற்றி வருகின்றன.

கத்தி டயலாக்
கத்தி திரைப்படத்தில், 2ஜின்னா என்ன? என்று விஜய் கேட்பதை போல ஒரு டயலாக் உண்டு. வெறும், காற்று. அந்த காற்றில் ஊழல் செய்த நாடு சார் இது.. என்று விஜய் அந்த டயலாக்கில் கூறுவார். இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் உள்ளபோது, விஜய் இவ்வாறு பேசியது, திமுக, காங்கிரசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிந்தது. ஆனாலும் பகிரங்கமாக பெரிய தலைவர்கள் யாரும் விஜய் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

மெர்சலால் எரிச்சல்
ஆனால், மெர்சல் திரைப்படத்தில் பல வசனங்கள், மத்திய அரசின் சில முக்கிய திட்டங்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன. இதனால், பாஜக தலைவர்கள் எரிச்சலடைந்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு குறித்த காட்சிகளை மெர்சல் படத்திலிருந்து நீக்க தமிழிசை கோரிக்கைவிடுத்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா
படத்தில் வடிவேலுவிடம் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முற்படும் காட்சியுள்ளது. அதில் கிழிந்த காலி பர்சை காண்பிக்கும் வடிவேலு, இந்தியாவில் யாரிடமும் பணமேயில்லை. எல்லோரும் கியூவில்தான் நிற்கிறார்கள் என்பதை போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. பண மதிப்பிழப்பை தொடர்ந்து டிஜிட்டல் இந்தியாவை புரமோட் செய்ய அரசு முயன்றதை இவ்வாறு படத்தில் கேலி செய்திருந்தனர்.

சிங்கப்பூருடன் ஒப்பீடு
அதேபோல சிங்கப்பூரைவிட அதிகம் ஜிஎஸ்டி வாங்கும் நாடு இந்தியா என்றும், ஆனால் இங்கு தரமான இலவச மருத்துவம் இல்லை என்றும், விஜய் பேசுவதை போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வசனம்தான் இப்போது அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது. ஓட்டுக்கு ரூ.5 ஆயிிரம் ரூபாய் வரை மக்களுக்கு பணம் தரும் ஊர் இது, இலவச மருந்து தரமுடியாதா என்ற டயலாக்கையும் விஜய் பேசியுள்ளார்.

விஜயகாந்த் வழியில் விஜய்
மாஸ் நடிகர்கள், மசாலா திரைப்படங்களில் வெறும் கதையின் நாயகனாகத்தான் வந்து செல்வார்கள். அந்த கதைக்கு ஏற்பத்தான் பஞ்ச் வசனம் வைக்கப்படும். ஆனால், சமீப காலங்களில் விஜய், சமூக கருத்துக்களை பஞ்ச்சாக பேச ஆரம்பித்துள்ளார். அரசியலை நேரடியாக விமர்சனம் செய்யும் லியாகத் அலிகான்-விஜயகாந்த் கூட்டணியில் வெளியான படங்கள் வெகு பிரபலமாக இருந்தன. பிற்காலத்தில் விஜயகாந்த்தை அரசியலில் தூக்கிநிறுத்த இந்த வசனங்கள் உதவின.விஜயகாந்த் வழியில் விஜய் வாக்காள பெருமக்களால் ஈர்க்கப்படுவாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications