உதயமாகிறது காங். (ஜெ.) அணி.... ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்தார் விஜயதாரணி!!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணி மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாள் நடைபெற்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா வெளியில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று ஒரு மனுவை கொடுத்தார்.பிறகு உங்களை தனியாக சந்தித்து பேச விரும்புகிறேன் என்று விஜயதரணி கூறினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா சிரித்துக் கொண்டே சரி, பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து நேற்றிரவு அதிரடியாக நீக்கப்பட்ட விஜயதாரணி, இதற்கு டெல்லி சென்று நியாயம் கேட்கப் போவதாக கூறி வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவை தனியாக சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையப்போகிறாரே என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக நாளிதழில் 'சாட்டை' என்ற பெயரில் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் விஜயதாரணி. அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டேன் என்றும் கூறி வந்தார்.
இந்த நிலையில் திடீரென முதல்வரிடம் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேமுதிகவில் அதிமுக (ஜெ) அணி ஒன்று உதயமாகி அக்கட்சிக்கு குடைச்சலை கொடுத்து வருகிறது. காங்கிரஸிலும் தற்போது ஜெ. அணி எம்.எல்.ஏ.வாக விஜயதாரணி செயல்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications