மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
இது தொடர்பாக இன்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களை விஜயகாந்தே நேரில் அழைத்துப் பேசினார். பேச்சின் முடிவில் கூட்டணி உருவானது.
பழம் கனிந்திருக்கிறது... பாலில் விழும் என நம்புகிறேன் என்று விஜயகாந்துடனான கூட்டணி எதிர்ப்பார்ப்பு குறித்து முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் அவரது நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, தனி ரூட்டை அறிவித்தார் விஜயகாந்த். இன்னொரு பக்கம், பாஜகவும் விஜயகாந்த் தங்கள் அணிக்கு வரவேண்டும் என்று மல்லுக் கட்டியது. அவர்களுக்கும் இப்போது திட்டவட்டமாக டாடா காட்டிவிட்டார்.
இந் நிலையில் இன்று காலை தங்களை விஜய்காந்த் நேரில் சந்தித்துப் பேச அழைத்துள்ளதாக மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதைடுத்து விஜய்காந்த்தை சந்திக்க வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தேமுதிக அலுவலகம் சென்றனர். அங்கு விஜய்காந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் 10 நிமிடங்கள் பேச்சு நடத்தினர்.
இதில் கூட்டணி உறுதியானது. இதையடுத்து விஜய்காந்தை மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. மேலும் 124 தொகுதிகளையும் தேமுதிவுக்கு ஒதுக்கியது.
முன்னதாக விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மக்கள் நலக் கூட்டணி இதுவரை தயாராக இல்லை. ஆனால், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் தான் கூட்டணி என்று விஜய்காந்த் கூறி வந்தார்.
இந் நிலையில் இந்த விஷயத்தில் மக்கள் நலக் கூட்டணி மிகவும் இறங்கி வந்து கூட்டணியை உருவாக்கியுள்ளது.