சட்டசபை லைவ்: சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் புது வழக்கு
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகதீசன் என்பவர் ஒரு பொது மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யவேண்டும். இதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கிற்கு பதிலளித்த தமிழக அரசு, நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றால், அதிக செலவு ஆகும். எனவே அது சாத்தியமல்ல என்று பதிலளித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொண்ட தேதிமுக தலைவர் விஜயகாந்த் தான் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தால், இலவசமாக தனக்கு சொந்தமான டி.வி.சேனலில் ஒளிபரப்பு செய்வதாக கூறியிருந்தார். ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் அப்பீல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டு வழக்கை பைசல் செய்தது.
இதையடுத்து இன்று விஜயகாந்த் சார்பில் புதிய மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக சட்டசபை நிகழ்வுகளை அரசு தன்னுடைய சொந்த செலவில் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்யவேண்டும். அல்லது எனக்கு சொந்தமான டி.வி. சேனலில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்று சட்டசபை செயலருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார் விஜயகாந்த்.