"அம்மா" இல்லை.. அலங்காரம் இல்லை.. விஜயகாந்த் வரலை.. கருணாநிதி வரலை.. சட்டசபை காட்சிகள்!
சென்னை: தமிழக சட்டசபையின் இன்றைய முதல் கூட்டம் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆளுநர் உரை என்றால் இடம் பெறும் சில விஷயங்களை இன்றைய கூட்டத்தில் காண முடியவில்லை.
ஆளுநர் உரையின்போது கண்ட சில காட்சிகளின் தொகுப்பு:
- ஆளுநர் உரை நிகழ்த்த வரும்போது சட்டசபை அரங்கம் வெகுவாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ஆளுநர் உரையாற்றும் இடம், அமரும் பகுதி ஆகியவற்றில் பூ அலங்காரம் செய்திருப்பார்கள். ஆனால் இந்த முறை அது இல்லை.
- இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதாலும், ஆளுநர் உரை என்பதாலும், கிட்டத்தட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் சபைக்கு வந்திருந்தனர்.
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டத்திற்கு வரவில்லை. அதற்கான காரணம் தேமுதிகவினருக்கே கூட தெரியாதாம்.
- ஆளுநர் உரையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பாராட்டி வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டு முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்த ஜெயலலிதாவை பாராட்டும் வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெறலாமா என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டித்துளள்ளார்.
- திமுக தலைவர் கருணாநிதியும் இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை.
- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் சபைக்கு வந்தபோது அங்கு அமர்ந்திருந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஸ்டாலினும், துரைமுருகனும் வணக்கம் வைத்தனர். பதிலுக்கு முதல்வரும் வணக்கம் கூறினார்.
- 2வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வரான பின்னர் நடைபெறும் 2வது சட்டசபைக் கூட்டம் இது. ஏற்கனவே கடந்த டிசம்பரில் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்தது.
- ஜெயலலிதா முதல்வராகவோ, எம்.எல்.ஏவாகவோ இல்லாத நிலையில் நடைபெறும் 2வது சட்டசபைக் கூட்டமும் இதுவாகும்.
- கடந்த முறை ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்து, ஓ. பன்னீர் செல்வம் முதல்வரானபோது மீண்டும் ஜெயலலிதா முதல்வராகும் வரை சட்டசபைக் கூட்டமே கூட்டப்படவில்லை. ஆனால் தற்போது 2 வது முறையாக கூட்டம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.