சவுண்டாக பறந்த விமானம்... பேச்சை மறந்த விஜயகாந்த்...எடுத்துக் கொடுத்த வேட்பாளர்
சென்னை: ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஏ.எம் காமராஜ் மற்றும் ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து தர்மராஜா கோவில், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திடீரென பேச்சை மறந்து தடுமாறியபோது உடன் இருந்த வேட்பாளர் அவருக்கு எடுத்துக் கொடுத்தார்.
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த், குடிநீர் பிரச்சனைகள், பாதாள சாக்கடை பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தார். கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் தேமுதிக வெற்றி பெற்றால் நிறைவேற்றப்படும் என்றும் விஜயகாந்த் உறுதிபட தெரிவித்தார்.
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாறிமாறி வாக்களித்து ஏமாந்தது போதும் என்று குறிப்பிட்ட கேப்டன், மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இங்கு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிமுகவும் ஏற்கெனவே ஆட்சி செய்த திமுகவும் ஊழல் செய்வதில் சமமாக உள்ளதாக கேப்டன் குறிப்பிட்டார். இருவரையும் ஒரே தராசில் வைக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் விமானம் ஒன்று திடீரென மேலே பறந்து போனது. அதைப் பார்த்த விஜயகாந்த் தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தினார். காரணம், மேலே பறந்த விமானம் எழுப்பிய சத்தம் ஜாஸ்தியாக இருந்ததால்.
இதையடுத்து விஜயகாந்த், மேலே பிளேன் போகுது... நான் பேசுற சத்தம் கேட்காது... என்று கூறினார்... தொடர்ந்து நான் என்ன பேசிட்டு இருந்தேன். எனக்கே மறந்து போச்சு என்று கூறவே இருந்த மதிமுக வேட்பாளர் மாசிலாமணி.... பேச்சை விட்ட இடத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.
ஆ.... என்று ஆரம்பித்த விஜயகாந்த் தொடர்ந்து பேசினார். வாஜ்பாய் காலத்தில் இந்தியாவில் தங்கநாற்கர சாலை அமைக்கப்பட்டதை கேப்டன் சுட்டிகாட்டினார். நாடு முழுவதும் மோடி அலை வீசிவதாகவும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்க போகிறது என்றும் கூறினார்.
மோடி பிரதமரானால் தமிழகத்திற்கு வேண்டிய அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று கூறிய விஜயகாந்த், குடிநீரை 10 ரூபாய்க்கு விற்கும் அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். அரசின் இலவச திட்டங்களுக்கு எம்ஜி ஆர் பெயர் வைக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அதிமுக அரசு அளித்த எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விஜயகாந்த் புகார் தெரிவித்தார்.
தமிழத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, தற்போது மின்வெட்டு நேரத்தை அதிகரித்து சாதனை படைத்துள்ளதாக கூறினார்.
தற்போது நிலவி வரும் பலமணி நேரம் மின்வெட்டால், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறிய விஜயகாந்த், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு நிரந்திர தீர்வு கிடைக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
சிங்கார சென்னை, சீர்மிகு சென்னை எனக்கூறி அதிமுகவுக்கு, திமுகவுக்கு மக்களை சீரழித்து விட்டதாக குற்றம்சாட்டிய விஜயகாந்த், சென்னை நகரம் தற்போது குப்பை மேடாக காட்சியளிப்பதாக வேதனை தெரிவித்தார்.
தமிழத்தில் உள்ள ஏரி குளங்கள் தூர்வாரப்படவில்லை என்று குற்றம்சாட்டிய விஜயகாந்த், தேசிய அளவில் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்காது என் என்றும் கேள்வி எழுப்பினார்.
இலங்கை தமிழர் படுகொலை விவகாரத்தில் கருணாநிதி முதலை கண்ணீர் வடிப்பதாகவும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
பாஜகவை மதவாத கட்சி என்று கூறும் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
எனவே நரேந்திர மோடியை பிரதமராக்கினால், நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்றும், டீசல், பெட்ரோல் விலை குறையும் என்றும், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அப்போது விஜயகாந்த் உறுதியளித்தார்.