கமல் எனக்கு தேங்ஸ் கூட சொல்லலை தெரியுமா.. விஜயகாந்த் ஆதங்கம்!
சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடும் தேமுதிக என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்தே தேமுதிக போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 டிவி சேனலுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் எந்த டிவியும் பார்ப்பதில்லை. பேப்பரும் படிப்பதில்லை. எல்லாக் கட்சியும் ஒவ்வொரு பேப்பரையும், தொலைக்காட்சியும் நடத்துவதால் நான் அவற்றைப் பார்ப்பதில்லை.
மோடி நல்லவர்
மத்திய அரசு சொன்னது எதையும் செய்யவில்லை. மோடி நல்லவர்தான். மத்தியில் நடக்கும் ஆட்சிதான் சரியில்லை.
நோ கமெண்ட்ஸ்
ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனென்றால் நானும் ஒரு நடிகன் தான். அங்கிருந்துதான் அரசியலுக்கு வந்தேன். அதனால் அது பற்றி எதுவும் கருத்து சொல்ல மாட்டேன். என்னைப் பற்றி நடிகர்கள் எந்தக் குறையும் சொல்லவில்லை. எனவே, நானும் அவர்களைப் பற்றியோ அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றியோ எதுவும் சொல்லவிரும்பவில்லை.
விஸ்வரூபத்திற்குக் குரல் கொடுத்தேன்
விஸ்வரூபம் படத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்தவன் நான்தான். ஆனால், அந்தப் பிரச்சனை முடிந்த உடன் எனக்குக் கமல் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவை நேரில் பார்த்து நன்றி தெரிவித்தார். விஸ்வரூபம் பற்றியெல்லாம் நான் பேசினால் எங்கள் ஆட்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.
மக்கள் முடிவு
நடிகர் கமல், ரஜினி என யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கேற்ப அவர்கள் வாக்களிப்பார்கள்.
நானே வெல்வேன்
என்னுடைய அரசியல் போட்டியாளர்களை வருத்தப்பட வைப்பேன். வரும் தேர்தலில் மக்கள் நிச்சயம் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள், நம்பிக்கை நெஞ்சில் வை. நம்பிக்கை உங்கள் வாழ்க்கை என நான் நம்புகிறேன்.
விசாரணை கமிஷனால் என்ன பயன்?
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கேட்கப்படுகிறது. எந்த நீதி விசாரணை நடந்தாவது தீர்ப்பு வந்துள்ளதா? எல்லாம் வேஸ்ட்.
தினகரன் நினைத்தால் ஆட்சி கவிழ்ப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ்ஸின் ஆட்சியைக் கவிழ்க்கும் திறமை தினகரனுக்கு உண்டு. அதனால் தினகரனையும் சசிகலாவையும் எளிதாக எடைபோடக் கூடாது. தினகரனும் சசிகலாவும் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்.
சசிகலாவின் செல்வாக்கு
122 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்துப் போகவில்லை. அவர்கள் அனைவரும் சசிகலாவுக்காக எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தவர்கள். அதிமுகவை பொறுத்தவரை சசிகலாவுக்குதான் செல்வாக்கு இருக்கிறது.
தமிழ் மட்டும்தான் தெரியும்
டிவி விவாதங்களும் மொழி புரியாத படங்கள் பார்ப்பதும் ஒன்று. எனக்குத் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. ஆங்கிலம் தெரியாது. மலையாளப் படம் பார்ப்பேன் என்று விஜயகாந்த் கூறினார்.