மதுரை நாய்கண்காட்சியில் விஜயகாந்த் வீட்டு செல்ல நாய்களுக்கு பரிசு
மதுரை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வீட்டு செல்ல நாய்கள் மதுரையில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் பங்கேற்றன. இதற்காக சென்னையில் இருந்து தனி வேனில் நாய்களை அழைத்து வந்திருந்தார் அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன். அவை போட்டியில் வென்றதோடு, சிறப்பு பரிசுகளும் வென்றன.
மதுரை கெனைன் கிளப் சார்பில் 12வது ஆண்டாக நாய்கள் கண்காட்சி காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 37 வகையான 160 நாய்கள் பங்கேற்றன. 7 அங்குலம் முதல் 3 அடி வரை உயரம் வரை உள்ள அரிய வகை நாய்கள் அணிவகுத்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
வித விதமான நாய்கள்
ஸ்பிங்கர், டாஸ்சின், புல்மாஸ்டிக், வீகல், ஐரிஷ் ஷெட்டர், டால்மேஷன், இங்கிலீஸ் பேனிஸ், செயின்ட் பர்னார்டு, ஆப்கான் பவுண்ட், சுலா என விதவிதமான வெளிநாட்டு நாய்கள், பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
விஜயகாந்த் வீட்டு நாய்கள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். நாய்களை சிறப்பாக வளர்ப்பததோடு கண்காட்சிகளுக்கும் அழைத்துச் சென்று பரிசுகளை வென்று வருவார். மதுரைக்கு நேற்று அவர் தனி வேனில் 13 வகை நாய்களை கொண்டு வந்தார்.
ஸ்டான்டர்ட்பூடில்
ஸ்வீடன் நாட்டு வகையான ஸ்டான்டர்ட்பூடில் எனும் 2 வயது ஆண் நாய் அனைவரையும் கவர்ந்தது. கருப்பு நிறத்தில் தலை, முதுகு, கால்கள் என குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முடி வளர்ந்திருந்தது. இதை பராமரிக்க ரஷ்யாவிலிருந்து கால்நடை வளர்ப்பு பயிற்சி பெற்ற பெண் வந்திருந்தார்.
ஸ்பெஷல் கவனிப்பு
மதுரைக்கு முதன்முறையாக ஸ்டான்டர்ட்பூடில் நாய் வந்திருந்ததால் அதை அனைவரும் ரசித்துப் பார்த்தனர். நாய்க்கு கிரீம் தடவி முடியை வெட்டிவிட்டு ரஷ்யப் பெண் பராமரித்தபடியே இருந்தார். அந்நாய் குளிரூட்டப்பட்ட அறையில் மட்டுமே வசிக்கும் என கூறப்பட்டது.
மதிப்பெண் போட்ட நடுவர்கள்
கண்காட்சியில் பங்கேற்ற நாய்கள் அதன் இனத்துக்குரிய அடையாளத்துடனும், ஆரோக்கியமாகவும், உடற்பயிற்சி அளிக்கப்பட்டும் வளர்க்கப்பட்டுள்ளனவா என சோதனையிடப்பட்டு அதற்கேற்ப மதிப்பெண் வழங்கப்பட்டது.
பார்வையாளர்கள் உற்சாகம்
நாய்களில் 7 அங்குலம் அளவே உள்ள அமெரிக்க பிஞ்சர் மினியேச்சர் நாயும், மெக்சிகோ வகையான சூவாவா நாயும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. அத்துடன் பொள்ளாச்சியிலிருந்து வந்த 3 அடி உயரத்துக்கும் மேற்பட்ட கிரேடன் அனைவராலும் பார்க்கப்பட்டது.
பரிசு பெற்ற நாய்கள்
போட்டியில் விஜயகாந்த் மகன் வளர்த்த ஸ்டான்டர்ட்பூடில் நாய்க்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆப்கன் ஹவுண்ட், டோபர் மேன் நாய்களும் பரிசுகளை வென்றன. வென்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றும் அளிக்கப்பட்டது.