என்னைக் கி்ண்டலடிப்பாங்க... அப்பக் கூட அமைதியா இருங்க.. விஜயகாந்த் அட்வைஸ்!
சென்னை: சட்டசபையின் கடைசி நாள் கூட்டத்தில் நான் பங்கேற்றுப் பேசினால், ஆளுங்கட்சியினர் சரமாரியாக என்னைக் கிண்டலடித்துப் பேசுவார்கள். ஆனால் தேமுதிக உறுப்பினர்களை அதை கண்டுகொள்ளாமல் அமைதி காக்க வேண்டும் என்று தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
ஜெயலலிதா சிறையிலிருந்து மீண்டு போயஸ் கார்டன் திரும்பிய பின்னர் விஜயகாந்த்தின் அரசியல் செயல்பாடுகள் கிட்டத்தட்ட முடங்கிப் போயுள்ளன. தனது மகன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை மேற்பார்வையிடுவதற்காக அவர் மலேசியா கிளம்பிப் போய் விட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர் ஊரில் இல்லை. இடையில் 2 - 3 அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டார். ஒரு மாத ஷூட்டிங்குக்குப் பின்னர் ஊர் திரும்பிய விஜயகாந்த், சட்டசபையின் 3 நாள் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் 2 நாட்களும் வரவில்லை.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் ஒரு மாதமாக ஊரில் இல்லை. ஒரு தமிழ்ப் பேப்பர் கூட படிக்கவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்று கூறினார் விஜயகாந்த். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரான, பிரதான எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் இப்படி பேப்பரே படிக்கவில்லை, என்ன நடந்தது என்றே தெரியாது என்று பேசியது சலசலப்பையும் கிண்டல்களையும் கிளப்பி விட்டுள்ளது.
2வது நாள் சபைக்கு வந்தவர் வளாகத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்துப் போட்டு விட்டு போய் விட்டார். நாளை கடைசி நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளையாவது அவர் வருவாரா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், தனது கட்சி எம்.எல்.ஏக்களை வரவழைத்து அவர் சில ஆலோனைகளை நடத்தியுள்ளாராம். அப்போது சில அறிவுரைகளையும் அளித்தாராம். இதுகுறித்து கட்சி தரப்பில் கூறுகையில், ஜெயலலிதா சட்டசபையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவரது புகழ்பாடுவதையே முதல்வரும், அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் கடைபிடிக்கின்றனர். அதைமீறி எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு பதில் தர மறுக்கின்றனர்.
கடைசி நாள் கூட்டத்தில் நான் பங்கேற்பது பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை. ஒருவேளை, நான் பங்கேற்று சபையில் பேசினால், ஆளுங்கட்சியினர் குறுக்கிடுவர், கிண்டலடித்து பேசுவர். அதற்காக, கோபப்பட்டு யாரும் எதுவும் பேசக்கூடாது. மீறினால், சஸ்பெண்ட் செய்வர். அதனால், அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளாராம் விஜயகாந்த்.
கடைசியாக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டசபைக் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றபோது, நாக்கைத் துருத்தியும், கோபமாக பேசியும் பெரும் பரபரப்பைக் கிளப்பினார் விஜயகாந்த் என்பது நினைவிருக்கலாம். அதன் பின்னர் அவர் சபைக்கு வருவதையே தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையிலும் கூட அவர் சபைக்கு வராமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications