ஆலங்குளம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் திடீர் மறியல்.. ஸ்தம்பித்த போக்குவரத்து!
அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை: ஆலங்குளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமம் கீழகரும்புளியூத்து. இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தம், ரேஷன் கடை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் இந்த பிரச்சனையையெல்லாம் தீர்க்க கோரி, பலமுறை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், தென்காசி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த திடீர் மறியல் காரணமாக 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.
தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கிராமத்திற்கு அழைத்து வந்து, பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிடவில்லை. அதிகாரிகள் வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து சாலையின் ஓரத்தில் அனைவரும் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.