பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னை: சென்னையில் இன்று முதல் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வேலை தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் தெருக்கள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் 2600 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. விநாயகர் சிலைகளை இன்று முதல் 4 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல 4 ஊர்வல பாதைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சிலைகளை ஊர்வமாக எடுத்து சென்று கடலில் கரைக்கும் பணி இன்று தொடங்கியது.

வடசென்னையில் உள்ள விநாயகர் சிலைகள் முத்துசாமி பாலம் அருகே ஒன்று சேர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே கடலில் கரைக்கப்பட்டன. மத்திய சென்னை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று கூடி பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை அருகே ஒன்று கூடி பாரதி சாலை வழியாக சீனிவாச புரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. தென்சென்னையில் உள்ள விநாயகர் சிலைகள் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி வழியாக நீலாங்கரை பாலவாக்கம் பல்கலை நகர் கடலில் கரைக்கப்பட்டன.
பட்டினப்பாக்கம் கடலில் இன்று காலையில் வீடுகளில் வைத்திருந்த சிலைகளை பொதுமக்கள், சிறுவர்கள் எடுத்து வந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைத்தனர். மதியம் முதல் பெரிய சிலைகள் கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் கடலில் இன்று 50 முதல் 100 சிலைகள் வரை கரைக்கப்பட்டன.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன்கள் மூலம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கப்பட்டதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளையும் சிலைகள் கரைப்பு நீடிக்கும். நாளைதான் அதிக அளவிலான சிலைகள் கரைக்கப்படவுள்ளது.
நீலாங்கரை பாலவாக்கம் பல்கலைநகர் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தண்டவாளம் அமைத்து டிராலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை முதலே சிலைகள் கொண்டு வரப்பட்டன. பெரிய சிலைகள் டிராலியில் வைத்து தள்ளி கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை கரைப்பை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications