விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர்னா… அம்மா நெருப்பு எம்.ஜி.ஆர் போட்டு தாக்கும் விந்தியா
திருச்சி: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ணிட்டு விஜயகாந்தை தேர்தல்ல நிற்க சொல்லுங்க என்று சவால் விட்ட நடிகை விந்தியா, "அவரால ஐந்து நிமிஷம் ஸ்டெடியா நிக்க கூட முடியாது, அப்புறம் எங்க தேர்தல்ல நிற்பது?" என்று விளாசி தள்ளினார். விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ நெருப்பு எம்.ஜி.ஆர் என்றும் அவர் கூறினார்.
திருச்சி திருச்சி நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் குமாரை ஆதரித்து நேற்றிரவு திருச்சியின் முக்கிய இடங்களில் நடிகை விந்தியா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
"இப்போது மாண்புமிகு அம்மாவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் குமார், நல்லவர், பாசமானவர், பண்புள்ளவர். அதைவிட எந்த குற்றப்பின்னணியும் இல்லாதவர். அதனால்தான் முதல்வர் இவரை திருச்சி தொகுதியில் நிறுத்தியுள்ளார்.
ஆனால் மாற்று கட்சி வேட்பாளர்கள் அப்படியில்லை. அந்த கட்சியில் சீட் வாங்கனும்னா, மகனா இருக்கணும், இல்லை மச்சானா இருக்கணும், ஒரே ஜாதிக்காரனா இருக்கணும் இல்லைனா பங்காளியா இருக்கணும், சொத்து வைத்திருக்கணும் இல்ல கட்டுகட்டாக கரன்சி வைச்சிருக்கணும், ஜெயிலுக்கு போயிட்டு வந்தா சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
கருப்பு எம்.ஜி.ஆரா?
தமிழ் நாட்டுல சிலர் நான்தான் தலைவன்னு சொல்லிக்கிட்டு திரியிறாங்க. இந்த விஜயகாந்த், கருப்பு எம்.ஜி.ஆர்னு சொல்லிக்கிட்டு திரியிறார். நீ கருப்பு எம்.ஜி.ஆர்ன்னா எங்கம்மா நெருப்பு எம்.ஜி.ஆர். எங்கம்மா கட் அவுட்டை பார்க்க கூடுற கூட்டம்தான் உன் மாநாட்டுக்கு கூடிய கூட்டம் என்பது தான் உண்மை.
இவருக்கு பாதுகாப்பு வேணுமாம். இவருக்கு எதுக்குங்க பாதுகாப்பு. இவருக்கிட்ட அடிவாங்குகிற எம்.எல்.ஏ.க்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கு வேணும்னா பாதுகாப்பு வழங்கலாம்.
தேர்தலில் நிற்க தில் இருக்கா?
3 நாளைக்கு முன்னால பிரேமலதா, தில் இருந்தா முதல்வரம்மா எம்.பி எலெக்சன்ல நிக்கட்டும் என அம்மாவுக்கு சவால் விட்டு பேசியிருக்காங்க. அதையே நான் கேட்கிறேன். நீங்க தேர்தல்ல நிற்க வேண்டியதுதானே. நின்னா டெபாசிட் கூட கிடைக்காதுன்னு பயம்.
விஜயகாந்த் நிற்பாரா?
விஜயகாந்த் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ணிட்டு தேர்தல்ல நிற்க சொல்லுங்க பார்ப்போம். அவரால ஐந்து நிமிசம் ஸ்டெடியா நிற்கவே முடியாது, எங்க தேர்தல்ல நிற்பது. சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களையே காப்பாத்த முடியாத இவரு நாட்டை காப்பாற்ற போகிறாராம். அவரு இப்போது எதிர்க்கட்சி தலைவராம்.அது எங்கம்மா போட்ட பிச்சை என்பதை விஜயகாந்த் மறந்துவிடக்கூடாது.
காங்கிரஸ்காரன்களின் நிலை
இவங்க இப்படின்னா காங்கிரஸ்காரங்க அதைவிட மோசம், வெளிநாட்டு தூதரை தாக்கினால் துடிப்பாங்களாம், ரெண்டு கேரளா மீனவர்களை சுட்டால் அலறுவாங்களாம். தமிழர்கள் பாதிக்கப்பட்டால் தூங்குவாங்களாம். இப்படிப்பட்ட காங்கிரஸை தமிழ்நாட்டிலிருந்தே விரட்ட வேண்டும்.
குஷ்பு தியாகியா?
எப்போதும் தேர்தல் வந்தால் வேட்பாளரை அறிவித்துவிட்டு உடனே பிரச்சாரத்தை துவங்கும் கருணாநிதி, இப்போது லேட்டா கிளம்புறாரு. அவருக்கு தி.மு.க.வில் குஷ்புக்கு சீட் கொடுக்கலையேன்னு கோபம், ஏன்னா குஷ்பு தி.மு.க.வை வளர்க்க பாடுபட்ட தியாகி பாருங்க என்று ஒரே போடாக போட்டார் விந்தியா.
அட்ரசைக் காணோமே
அதேபோல அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை சி.ஆர். சரஸ்வதி, திமுகவிற்கு போனால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என்றார். என்னோட குருநாதர் கே.பாக்கியராஜ் அப்படித்தான், திமுகவிற்குப் போனார், இப்போ எங்கே இருக்கார்னே தெரியலை. அதேபோல பலபேரோட அட்ரஸ் காணாமல் போயிருச்சு என்றும் பேசினார் சி.ஆர். சரஸ்வதி.