கேரளாவில் தெருநாய்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் உண்ணாவிரதம்
சென்னை: கேரளாவில் தெரு நாய்களை கொல்லும் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.
கேரள சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஆபத்தான தெரு நாய்களை கொல்ல மாநில அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் தெரு நாய்களை கொலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைனில் பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.
எதிர்ப்பு கிளம்பியும் கேரள அரசு தெரு நாய்களை கொலை செய்யும் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
உண்ணாவிரதம்
கேரளாவில் தெரு நாய்கள் கொல்லப்படும் நடவடிக்கையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான விலங்கு நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
விஷால்
நாய்களை கொலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.
சட்டமே உள்ளது
விலங்குகளை கொலை செய்யக் கூடாது என்று சட்டம் உள்ளது. சட்டத்தை பின்பற்றுங்கள் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம். எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களை கொல்லாமல் கருத்தடை அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்றார் விஷால்.
கடிதம்
நாய்களை கொலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்ட கடிதத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் அளிக்கப்போவதாக பிஎப்சிஐ விலங்குகள் நல அமைப்பின் தலைவர் அருண் பிரசன்னா தெரிவித்தார்.