பகீர்.. விஷால் வேட்புமனுவில் நாங்கள் கையெழுத்து போடவில்லை.. வெளியான தீபன், சுமதி வாக்குமூலம் வீடியோ
சென்னை: ஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கலின் போது விஷாலை முன்மொழியவில்லை என்று சுமதி, தீபன் ஆகியோர் வாக்குமூலம் அளித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆனால், வேட்புமனு பரிசீலனையின்போது, நீண்ட இழுபறிக்கு நடுவே, விஷால் மனுவை நிராகரித்தார் தேர்தல் அதிகாரி.
கையெழுத்து விவகாரம்
விஷால் மனுவை தள்ளுபடி செய்ய முக்கிய காரணம், விஷாலை முன்மொழிந்த 10 பேரில் இருவர் அந்த மனுவில் தாங்கள் கையொப்பமிடவில்லை எனக் கூறி தன்னிடம் புகார் அளித்திருப்பதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி கூறியதுதான்.
மிரட்டல்
தன்னை போட்டியிலிருந்து விலக்குவதற்காக ஆளும் கட்சியினர் மிரட்டியுள்ளதாகவும், இதனால் கையெழுத்திட்ட இருவரும் மாறிப்பேசுவதாக விஷால் குற்றம்சாட்டியிருந்தார்.
வாக்குமூலம்
இந்நிலையில் விஷால் குறிப்பிட்ட சுமதி, தீபன் ஆகிய இருவரும் நேற்று ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து, விஷாலின் வேட்பு மனுவைத் தாங்கள் முன்மொழிந்து கையொப்பமிடவில்லை என்று தெரிவித்தனர்.
அச்சமில்லையாம்
அதேநேரம், எந்த மிரட்டலுக்கும் அஞ்சி இவ்வாறு கூறவில்லை என்றும், வாக்குமூலம் அளித்துள்ளனர். சுமதியோ, தனது வீட்டுக்கு வெளியே மீடியாக்கள் நிற்பதுதான் தொல்லையாக இருப்பதாகவும், வேறு எந்த தொல்லையும் தங்களுக்கு இல்லை என்றும் கூறினார்.
வெளியான வீடியோ
இவர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்தபோது, தேர்தல் பார்வையாளர்களும் உடனிருந்தனர். இந்த வாக்குமூலத்தின் வீடியோ பதிவை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ளனர். இதனால் போலியாக கையெழுத்து போட்டதாக கூறி விஷால் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.