கிடுக்கிப்பிடி விசாரணை.. வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விஷால் ஆடிட்டர் ஆஜர்!
சென்னை: நடிகர் விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வருமானவரி அலுவலகத்தில் விஷால் ஆடிட்டர் இன்று ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், வட பழனியிலுள்ள அவரது அலுவலகத்தில், கடந்த 23ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

இதன்பிறகு விஷால் பெயரை குறிப்பிடாமல் வருமான வரித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், மேற்படி நபர், கடந்த 2016-2017-ஆம் ஆண்டில் வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, ரூ.50 லட்சம் மதிப்பிலான தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற தகவலின் அடிப்படையிலேயே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரி சட்ட விதிகளின்படி, பிடித்தம் செய்யப்பட்ட வரி 7 நாட்களுக்குள் வருமான வரித்துறையிடம் செலுத்த வேண்டும். அதன்படி, மேற்படி நபர் முறைகேட்டை ஒப்புக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை உடனடியாக செலுத்துவதாக உறுதியளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த விஷால், "நான் முறைப்படி வருமான வரி செலுத்தி வருகிறேன். எந்த பிரச்சினை என்றாலும் சந்திக்க தயார்" என்று கூறினார். இந்த நிலையில் வரி செலுத்துவது தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று 24ம் தேதி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து விஷாலின் ஆடிட்டர் ஸ்ரீதர் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அப்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். மெர்சல் படத்தை ஆன்லைனில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதற்கு, கடும் வார்த்தைகளில் விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். இதன்பிறகே ரெய்டு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications