ஜெ. படத்தை நீக்கிவிட்டு 'பன்னீர்செல்வம் உப்பு'ன்னு போடுங்க!: இல்லைன்னா... திமுக எச்சரிக்கை
சென்னை: அரசு திட்டங்களில் 'அம்மா' படங்களை எடுக்காவிட்டால் கோர்ட்டுக்கு செல்ல திமுக முடிவு செய்துள்ளது. உப்பு, குடிநீர் போன்றவற்றின் மேற்புறங்களில் தனது புகைப்படத்தை போட்டு அம்மா என்றும் பெயரிட்டு மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அம்மா கேண்டீன்களிலும் ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பதவி பறிபோயுள்ளது
தற்போது ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவரது முதல்வர் மற்றும் சட்டசபை மக்கள் பிரதிநிதி ஆகிய பதவிகள் பறிபோயுள்ளன.
தொடரும் படங்கள்
இந்நிலையிலும், குடிநீர் பாட்டில், உப்பு பாக்கெட் போன்றவற்றின் மேல் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன. அரசில் அங்கம் வகிக்காத ஒருவரின் படத்தை அரசு திட்டங்களில் பயன்படுத்துவது வழக்கம் கிடையாது. ஜெயலலிதா தற்போது ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவியில் மட்டுமே இருப்பதால் அரசுக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது என்பதே சட்ட விதி.
கோர்ட் செல்ல திட்டம்
இதையடுத்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஜெயலலிதா புகைப்படங்களை அகற்றச் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கூறுகையில், ஜெயலலிதா படத்தை அகற்றுமாறு அரசுக்கு நான் எழுதிய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
பன்னீர் செல்வம் படத்தை போடலாமே
எங்கள் கோரிக்கையின் பின்னணியில் அரசியல் கிடையாது. ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை போட்டு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தினால் திமுக அதை கண்டுகொள்ளப்போவதில்லை. ஆனால் அரசு திட்டத்தில் அரசுக்கு சம்மந்தம் இல்லாதவர் படத்தை போடுவது சட்டப்படி தவறு என்றார்.