அம்மா வருகை... திமிலோகப்பட்ட ஆர். கே.நகர்.. உற்சாகத்தில் அதிமுகவினர்!
சென்னை: அம்மாவை பார்க்க நாங்க எல்லாம் காத்துக்கிட்டு இருக்கோம்... எங்களை பார்க்க அம்மா வர்றாங்க... எங்க ஓட்டு அம்மாவுக்குத்தான்... இது ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் ஒரு அதிமுக தொண்டரின் கருத்து.
ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்வதை முன்னிட்டு அத்தொகுதியே விழாக்கோலம் பூண்டது.
வரும் 27ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதா, இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு தொகுதியில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தனர் அதிமுகவினர். அதிமுக தொண்டர்கள் பலரும் ஜெயலலிதாவின் வருகையை எதிர்பார்த்து பிற்பகல் முதலே காத்திருந்தனர்.
கடுமையான வெயில் காரணமாக மாலை 6 மணிக்கு மேல்தான் போயஸ்கார்டனை விட்டு கிளம்பினார் ஜெயலலிதா. போயஸ் கார்டனில் இருந்து வழியெங்கும் காத்திருந்த அதிமுகவினர் பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். ஒரு சில தொண்டர்கள் ஆர்வத்தில் பிரச்சார வேன் வரும் போது சாலையில் விழுந்து வணங்கினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை பெற்ற பின்னர் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வரும் போதெல்லாம் அதிமுகவினர் குவியத் தொடங்கிவிடுகின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்த நாளன்றும் கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரச்சாரத்திற்காக இன்று ஜெயலலிதா வருவதை முன்னிட்டு கடும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் மக்கள் காத்திருந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.ஜி.ஆர். சிலை - பெட்ரோல் பங்க் அருகிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் அவர் 16 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.