திருமணத்தையே மறைத்த மோடியா நாட்டை வழிநடத்துவது? கருணாநிதி
புதுச்சேரி: தமது திருமணம் நடந்ததையே மறைத்த மோடியா நாட்டை வழிநடத்துவது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி தொகுதி வேட்பாளர் எச்.நாஜிமை ஆதரித்து நேற்று கருணாநிதி பேசியதாவது:
இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளர் ஒருவர் நேற்றுவரை திருமணமாகதவராக இருந்தார். மணமாகாத அவர் காமராஜர் போல கடைசிவரை தேசத் தொண்டு ஆற்றப் போகிறார் என எண்ணினோம்.
ஆனால், அவரது மனு தாக்கலின் போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மை வெளி வந்துள்ளது. இதுதான் "மோடி வித்தை' போலும். இப்படிப்பட்டவர்கள் பிரதமரானால் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிவருமோ? அவர் நம்மையெல்லாம் ஆளப்போகிறார் என்றால் அந்த ஆட்சி எப்படியிருக்கும்?
ஜாதி, மத வேறுபாடு, பிரிவினை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் போன்ற வித்தியாசம் பார்ப்பவர்கள் வேண்டுமா? எல்லோரும் இந்நாட்டு மன்னர், எம்மதமும் சம்மதம் என சமதர்மம் பேசுபவர்கள் வேண்டுமா? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு பாபர் மசூதி அல்ல, அனைத்து மசூதிகளும் தாக்கப்படலாம்.
அந்தத் தாக்குதலின் காரணமாக நாடே ரணகளமாகும் நிலை ஏற்படும். இதை மறந்து விடாமல் இத்தேர்தலில் நீங்கள் முடிவெடுக்க வேண்டும். இந்த முடிவு நமக்கானது மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கான முடிவும் ஆகும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.