குரங்கணி காட்டுத்தீ... மரணத்தின் வாசலுக்கு சென்று திரும்பினோம் - திகில் அனுபவங்கள்
காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க பள்ளத்தில் குதித்து உயிர் தப்பினோம் என்று குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
சென்னை: புகையாக பரவி, காட்டுத்தீயாக மாறி சுற்றி வளைத்தது என்று குரங்கணி தீ விபத்தில் சிக்கி
எமனின் வாசல் வரை சென்று பிழைத்த சஹானா, விஜயலட்சுமி ஆகியோர் திகில் அனுபவங்களை கூறி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமையன்று மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் ஞாயிறன்று கீழிறங்கினர். அப்போது பரவிய காட்டுத்தீயின் நாக்குகள் 9 பேரின் உயிரை குடித்தது. 27 பேர் மீட்கப்பட்டாலும் 10 பேர் அதிக தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் நிஷா என்பவர் நேற்று உயிரிழக்கவே பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
மலையேற்ற பயிற்சிக்காக சென்றவர்களில் சென்னை குரோம்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்த கல்லூரி மாணவி சஹானா, தாம்பரம் முடிச்சூரை சேர்ந்த விஜயலட்சுமி, ஆகியோர் காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளனர். இவர்களுடன் வேளச்சேரி பூஜாகுப்தா (23), மடிப்பாக்கம் மோனிஷா, உள்ளிட்ட 7 பேர் காயங்கள் இன்றி ஊர் திரும்பியுள்ளனர்.
மலையேற்ற குழுக்கள்
சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் சஹானா, எமனின் வாயில் வரை சென்று திரும்பிய அனுபவத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து 23 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு பஸ்களில் தேனி சென்றோம். அங்கிருந்து அனைவரும் ஒரே குழுவாக மலையேற புறப்பட்டோம். எங்களுக்கு உதவியாக 4 வழிகாட்டிகளும் வந்தனர்.
செங்குத்தான மலை
மலையேறியபோது எங்களுடன் வந்த 3 பேரால் நடக்க முடியவில்லை என்று மூணாறுக்கு ஜீப்பில் சென்று விட்டனர்.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு மலையேறத் தொடங்கினோம். செங்குத்தான மலை என்பதால் மெதுவாகத்தான் ஏற முடிந்தது. மாலை 6 மணிக்கு கொழுக்கு மலை சென்றடைந்தோம். இரவில் அங்கேயே 4, 5 பேராக தனித்தனியாக முகாமிட்டு தங்கினோம்.
கறுப்பு ஞாயிறு
வேறு சில மாவட்டங்களில் இருந்து 2 மலையேற்றக் குழுக்கள் வந்திருந்தன அவர்களும் கொழுக்குமலையில் முகாமிட்டனர். ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் தேனிக்கு திரும்பி அங்கிருந்து சென்னைக்கு திரும்ப வேண்டும் என்பது எங்களது திட்டம். இதனால் ஞாயிறன்று காலை 11 மணிக்கு முகாமிட்ட மலைப்பகுதியில் இருந்து புறப்பட்டோம். மதிய உணவிற்கு ஒரு இடத்தில் 2 மணி அளவில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அப்போதுதான் விபரீதம் நிகழ்ந்தது.
உயிர்பிழைத்தது நிம்மதி
புகையாக பரவியது அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. காட்டுத்தீ திடீரென பற்றியது. அதிர்ச்சியடைந்த அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக சிதறி ஓடினோம் என்னுடன் மேலும் 5 பேரும் சேர்ந்து ஓடிய போது உயிர் தப்பினால் போதும் என்று மலையடிவார பள்ளத்தில் குதித்தோம். மரண பயத்தோடு காத்திருந்தோம். மாலை 6 மணிக்கு மேல் கிராம மக்களும் வனத்துறையினரும் எங்களை மீட்டனர். அதன்பிறகுதான் உயிர் பிழைத்து விட்டோம் நிம்மதி பெருமூச்சு விட்டோம். இதுபோன்ற திகிலான அனுபவத்தை இப்போதுதான் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறேன் என்று பயம் விலகாமல் பேசினார் சஹானா.
காற்று வீசியதில் பரவிய தீ
தாம்பரம் முடிச்சூர் அருகே வரதராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி தனியார் ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமியும், அவருடைய தோழியும் பள்ளத்தில் குதித்து தப்பியுள்ளனர். காற்று வேகமாக வீசியதால் எந்தப்பக்கம் இருந்து தீ பரவுகிறது என்பதை அறிய முடியவில்லை.
தப்பி பிழைத்தோம்
உயிரை கையில் பிடித்துக்கொண்டு பள்ளத்தில் குதித்தோம். அத்தனைபேரும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினோம். அதன்பிறகு கிராம மக்கள் எங்களை மீட்டு தரைப்பகுதிக்கு அழைத்து வந்தனர். எங்களுடன் வந்தவர்களில் பலர் உயிர் இழந்தது வேதனை தருகிறது. இதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி.