காவிரி: தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம்-ஆயுதம் எது என்பதை தீர்மானிப்பது எதிரி- அமீர் மீண்டும் உறுதி
நாங்கள் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எங்கள் எதிராளிதான் தீர்மானிக்கிறார்கள். தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம் அது அறிவு ஆயுதமாகவும் இருக்கலாம் என்று அமீர் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்று இயக்குநரும் நடிகருமான அமீர் கூறியுள்ளார். மண்வெட்டி, கலப்பையும் ஆயுதமே, அறிவு ஆயுதமாகவும் இருக்கலாம் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காவிரி வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பொழுதுபோக்கிற்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் போராட்ட நோக்கம் திசை திரும்பி விடும் என்பதால் இதனை ஒத்திவைக்க பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ் திரை உலகினரும் இதனை வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று செய்தியாளர்களிடம் தமிழ் திரையுலகினர், காவிரி உரிமை மீட்பு குழுவினர் செய்தியாளர்களிடம் சந்தித்தனர். அப்போது காவிரி நீரை பெற தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்று கூறினார் இயக்குநர் அமீர். அது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். மாலை 5.30 மணிக்கு அண்ணா சிலை முன்பு அனைவரும் கூடி போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறினர்.
அப்போது பேசிய அமீர்,கேளிக்கை விளையாட்டு கூடாது என்பது அல்ல. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த விளையாட்டை ஒத்தி வைத்து எங்கள் துயரத்தில் பங்கு கொள்ளுங்கள் என்றுதான் கேள்கிறோம்.
2013ஆம் ஆண்டு இதே போல விளையாட்டு வேறு நாட்டுக்கு மாற்றப்பட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். இது மக்கள் பிரச்சினை என்பதால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஒத்தி வைத்திருக்கலாம்.
போட்டி நடந்தாலும் அதை காண வரும் மக்கள் கருப்பு சட்டை அணியவும், பதாகை ஏந்தவும் அனுமதி வழங்க வேண்டும். மைதானத்தில் கிரிக்கெட்டை ரசிக்கட்டும், எதிர்ப்பையும் காட்டட்டும். எதிர்ப்பை காட்டவாவது அனுமதி வழங்குங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.
மொத்த அரங்கமும் காலியாக இருந்தால் மத்திய அரசை உலுக்கும். எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுத்தால் வழக்கு போடுகிறார்கள். தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம். நாங்கள் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிராளிதான் தீர்மானிக்கிறார்கள். மண்வெட்டியும், கலப்பையும் கூட ஆயுதம்தான். ஆயுதம் என்பது அறிவு ஆயுதமாகவும் இருக்கலாம் என்று அமீர் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் காவிரிக்காக ஆயுதம் ஏந்தியும் போராடுவோம். மத்திய அரசுதான் இறையாண்மைக்கு எதிரான தேசதுரோகி. தமிழக மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்வார்கள் என்ற தைரியமா என்று அமீர் நேற்று பேசினார். அமீரின் நேற்றைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று கூறியுள்ளார்.