வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம்: சென்னையில் இருந்து தூத்துக்குடி திரும்பிய குடும்பம் கண்ணீர்
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம் என சென்னையில் இருந்து தூத்துக்குடி திரும்பிய குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர்.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் எழும்பூர் ரயில் நிலையம் மூடப்பட்டது. இந்த நிலையில் வெள்ள நீர் வடிந்ததால் மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து நேற்று நண்பகல் புறப்பட்ட ரயில் இன்று அதிகாலை தூத்துக்குடிக்கு வந்தது. வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த ரயிலில் 25 பேர் கொண்ட 4 குடும்பத்தினர் மட்டுமே வந்தனர்.
சென்னையில் வெள்ளத்தில் இருந்து தப்பி வந்த அலி மரக்காயர் என்பவர் கூறுகையில்,
நாங்கள் சென்னை புதுப்பேட்டையில் வசித்து வந்தோம். கூவம் ஆற்றில் வெள்ளம் வந்ததால் அங்கு கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்தது. அப்பகுதி இளைஞர்கள் எங்களது குடும்பத்தினரை மீட்டனர்.
எங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பழையகாயலில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடிக்கு வந்துள்ளோம். இந்த மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை எல்லாம் இழந்து விட்டோம் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.