இரட்டை இலைக்கு ஏன் கடவுளே இவ்வளவு சோதனை??.. திவாகரன் சொல்வதைப் பாருங்க!
9 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் சின்னத்தை முடக்கும் போது, எங்களிடம் உள்ள எம்எல்ஏக்களை வைத்து முடக்க முடியாதா? முடக்குவோம்.
திருவாரூர்: இரட்டை இலை சின்னத்தை அவர்கள் மீட்க முயற்சி செய்தாலும் நாங்கள் விட மாட்டோம் ஓபிஎஸ் முடக்கியதுபோல எங்களிடம் உள்ள எம்எல்ஏக்களை வைத்து முடக்குவோம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
திருவாரூர் அருகே உள்ள புளிச்சகாடு என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல படத்திறப்பு விழாவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பங்கேற்றார்.
தமிழக அரசுக்கு எதிராகவும், கட்சி, சின்னத்தை முடக்குவோம் என்றும் பேட்டியளித்தார் திவாகரன்.
நாஞ்சில் சம்பத்
செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன்,நாஞ்சில் சம்பத் வரம்பு மீறி பேசுவதாக கூறுகின்றனர். தற்போது அமைச்சர்கள் பேசும் முறை நாகரீகம் என்றால் நாஞ்சில் சம்பத் பேசுவதும் நாகரீகம் தான்.
பெரும்பான்மையில்லை
சென்னையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இதிலிருந்தே எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என தமிழக மக்களுக்கு தெளிவாக புரியும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆளுநர் உத்தரவிடவில்லை எனில் குடியரசுத்தலைவரையும் நீதிமன்றத்தையும் நாடுவோம். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னையில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்.
நோட்டீஸ் அனுப்பியது ஏன்?
மக்கள் பிரச்னையில் சர்வ கட்சி கூட்டத்தை கூட்டி தீர்வுகாண வேண்டியது அவசியமாகும். குட்கா விவகாரம் தொடர்பாக நடைபெற்ற உரிமைக்குழுவில் சபாநாயகர் இருக்கும்போது துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் ஏன் வந்தது.
நாங்களும் முடக்குவோம்
ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளால் இரட்டை இலையை மீட்க முடியாது. 9 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் சின்னத்தை முடக்கும் போது, எங்களிடம் உள்ள எம்எல்ஏக்களை வைத்து முடக்க முடியாதா? முடக்குவோம். இவ்வாறு திவாகரன் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு விழா
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த தருணத்தில் கட்சி, கொடி, சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதை மீட்க வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கை. ஆனால் பதவி சண்டையில் ஆள் ஆளுக்கு மல்லுக்கட்ட எதிர்கட்சியினருக்குத்தான் கொண்டாட்டமாக உள்ளது என்கின்றனர் உண்மையான அதிமுக தொண்டர்கள்.