சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்க மாட்டோம்... வெற்றிவேல் எம்எல்ஏ திட்டவட்டம்
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்க மாட்டோம்... வெற்றிவேல் எம்எல்ஏ திட்டவட்டம்
சென்னை: விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் எங்களுக்கு கிடைக்கவும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் பதில் அளிக்க போவதும் இல்லை என்று வெற்றிவேல் எம்எல்ஏ திட்டவட்டமாக தெரிவித்தார்.
சசிகலா, தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை எடப்பாடி அணி நிறைவேற்றியதால் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் வெற்றி பெற்றது. ஊழல் புகார் கூறிய ஓபிஎஸ்ஸை ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்கள் முதல்வருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
மாற்ற வேண்டும்
அதாவது ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லாததால் அவரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து புதுவையில் உள்ள விடுதியில் அந்த 19 பேரும் தங்கியுள்ளனர்.
சபாநாயகர் நோட்டீஸ்
தனக்கு தெரியப்படுத்தாமல் 19 பேரும் ஆளுநரை சந்தித்ததால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் மனு அளித்தார். அதன்பேரில் 19 பேரும் கொறடாவின் புகாருக்கு ஒருவாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் இருவர் ஆதரவு
தற்போது தினகரனுக்கு மேலும் இரு எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியும், விருத்தாசலம் எம்எல்ஏ கலைசெல்வனும் விடுதியில் தங்கியுள்ளனர்.
நோட்டீஸ் கிடைக்கவில்லை
சபாநாயகர் நோட்டீஸ் குறித்து பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவைதான் நாங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டோம். கவர்னரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். சபாநாயகர் எங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளாராம். அந்த நோட்டீஸ் இதுவரையில் எங்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் அதற்கு பதில் அளிக்க மாட்டோம் என்றார்.