இந்த ஆளுநர் அப்படி என்னத்தைத்தான் "உன்னிப்பாக" கவனிக்கிறார்?
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் இதுவரை சென்னைக்கு வராமல் இருக்கிறார். எங்கிருந்தாவது உத்தரவு வந்தால்தான் அவர் வருவாரா என்ற கேள்வியும் எழுகிறது.
சென்னை: தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர ராவ் ஏன் சென்னைக்கு வராமல் பதுங்கிக் கொண்டிருக்கிறார் என்பது மிகப் பெரிய விவாதமாக வெடித்துள்ளது. இவர் ஏன் மும்பையிலேயே பதுங்கியிருக்கிறார். யார் உத்தரவுக்காக காத்திருக்கிறார் என்று பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல குழப்பங்களை தமிழகம் சந்தித்து வருகிறது. அதில் மிகப் பெரிய குழப்பம், தமிழகத்திற்கு முழுநேர ஆளுர் இல்லை என்பது. தமிழகத்தை சற்றும் மதிக்கவில்லை மத்திய பாஜக அரசு. குட்டி குட்டி மாநிலங்களுக்கெல்லாம் கூட முழு நேர ஆளுநர் உள்ள நிலையில் இந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான தமிழகத்திற்கு இதுவரை முழு நேர ஆளுநர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியானது, வேதனையானது.
ஆனால் அதுகுறித்து மத்திய அரசு கவலைப்படவே இல்லை. ஆந்திராவைச் சேர்ந்தவரான மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர ராவ் தான் தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். இவரது செயல்பாடுகள் ஆரம்பத்திலிருந்தே விவாதத்துக்குரியவையாகத்தான் உள்ளன.

ஏன் சென்னை வரவில்லை
சசிகலாவை சட்டசபை அதிமுக தலைவராக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர். இந்த முடிவை ஆளுநரிடம் தெரிவித்து ஆட்சியமைக்க உரிமை கோர சசிகலாவும் காத்திருந்தார். ஆனால் ஆளுநர் கோவையிலிருந்து டெல்லிக்குப் போய் விட்டார். ஆனால் உண்மையில் அவர் மும்பைக்குத்தான் போனார்.

திரும்ப வரவேயில்லை
மும்பை போனவர் திரும்ப வராமலேயே இருக்கிறார். சட்டப்படி பார்த்தால் தமிழகத்தில் இவ்வளவு பெரிய அரசியல் குழப்பம் நிலவியுள்ள நிலையில் ஒரு முதல்வர் ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர் உடனடியாக ஓடி வந்திருக்க வேண்டும். என்ன ஏது என்று விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அவர் சென்னைக்கு வராமல் இருக்கிறார்.

யாருக்காக காய் நகர்த்துகிறார்
மாறாக மும்பையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா விவகாரம் குறித்தும் அவர் பதட்டப்படவில்லை. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா குறித்தும் பதட்டப்படவில்லை. மாறாக அங்கிருந்தபடியே உன்னிப்பா கவனித்துக் கொண்டிருக்கிறாராம்.

அப்படி என்னதான் கவனிக்கிறாரோ
மும்பையிலிருந்து கொண்டு எப்படி அவரால் தமிழக நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்க முடியும் என்பது பெரும் புதிராக உள்ளது. ஒரு முக்கியமான மாநிலம், அங்கு பெரும் குழப்பம், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது, மக்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். வந்திருக்க வேண்டாமா இந்த ஆளுநர் உடனடியாக? அதை விட்டு விட்டு அவர் உன்னிப்பாக கவனிக்கிறார் என்பது தெரியவில்லை.

உத்தரவுக்காக காத்திருப்பா
ஒரு வேளை எங்கிருந்தாவது உத்தரவு வர வேண்டும் என்று அவர் காத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. உத்தரவுகளுக்கு ஏற்ப அவர் செயல்படுகிறாரா என்பதும் புரியவில்லை. அடிப்படையில் ராவ் ஒரு பாஜக காரர் என்பதும் இங்கு நமது நினைவுக்கு வந்து போகிறது.
தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!












Click it and Unblock the Notifications