இதை செய்திருந்தால் 7 பேர் உயிர் போயிருக்காது.. சேலம் விபத்து பற்றிய புது தகவல்கள்!
Recommended Video
சென்னை: சேலம் மாமாங்கம் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலியான சோகம் இன்று அதிகாலை, நடந்தது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்று தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரவிந்த் என்ற தனியார் பஸ் தருமபுரி நோக்கி சென்றது. இந்த பஸ் மாமாங்கம் என்ற பகுதியில் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அங்கே, சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பின்னாலிருந்து மோதியது.
மோதிய வேகத்தில் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து அந்த பஸ் சாலை தடுப்பைத் தாண்டி எதிர்ப்புறமாக சென்றது.
மோசமான விபத்து
எதிர்ப்புறம் பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த யாத்திரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தனியார் ஆம்னி பஸ் மீது மோதியது. இதனால் யாத்திரா ஆம்னி பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இரு பஸ்களிலும் பயணித்த 38 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, சேலம் நகர போலீஸ் கமிஷனர் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பரிசீலனை நடத்தினர்.
பஞ்சர் ஆட்டோ
இதனிடையே, விபத்து நடைபெறுவதற்கு என்ன காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவற்றுக்கு அடிப்படை காரணம் பஞ்சராகி நின்ற சரக்கு ஆட்டோ தான் என்று தெரியவந்துள்ளது. சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மிக அதிக பாரத்தை ஏற்றுக் கொண்டு கிளம்பியுள்ளார். எனவே பின்பக்க கதவை முழுமையாக அடைக்க முடியாமல் பாதியாக திறந்த நிலையிலேயே அதை கட்டி வைத்து இருந்துள்ளார்.
ஸ்டிக்கர் தெரியவில்லை
இதனால் பின் பக்க கதவு இருந்த பிரதிபலிக்கும் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியவில்லை. சரி அதுதான் போகட்டும் என்றால், பஞ்சராகி சாலையில் நின்ற போது அதை உணர்த்தும் வகையில் கூம்பு வடிவ பிரதிபலிப்பானை, பின்னால் கொண்டு சென்று வைக்கவில்லை. இன்டிகேட்டரும் போடவில்லை. இதன் காரணமாகத்தான் சேலத்தில் இருந்து தருமபுரி சென்ற தனியார் பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதியது.
டிரைவர்களுக்கு பாடம்
இரவில் வாகனங்களை ஓட்டிச் செல்வோர் வாகனங்களை இயக்கும்போது மட்டுமல்ல, அது பழுதாகி வழியில் நின்றால்கூட என்னென்ன மாதிரி எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்காவிட்டால் என்னென்ன பெரிய பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதற்கு சேலத்தில் நடந்த இந்த சம்பவம் மிகப் பெரிய உதாரணம்.