உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி ரகசியம் இதுதாங்க... "உண்மையை உடைத்த" உதயநிதி ஸ்டாலின்
ராணிப்பேட்டை: ‛‛தமிழகம் முழுவதும் மக்களிடம் மிகுந்த எழுச்சி காணப்பட்டதால் தான் உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது'' என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சமீபத்தில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் திமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றிருந்தனர். இதனால் தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக நகராட்சி, பேரூராட்சிகள் திமுகவிற்கு கிடைத்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாமக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் தோல்வி அடைந்தன.

வெற்றி ரகசியம்
இந்நிலையில் தான் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக எப்படி வெற்றி பெற்றது என்பதற்கான ரகசியத்தை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி கூறியுள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் ஜி.கே.உலகப்பள்ளி வளாகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் விழாவையொட்டி கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது ‛‛நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்துக்கு சென்றேன். அப்போது மக்களிடம் மிகுந்த எழுச்சி காணப்பட்டது. இதன் காரணமாக திமுக 99 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுதான் திமுகவின் வெற்றிக்கான முக்கிய காரணம்'' என்றார்.

ரூ.2500 கோடி
முன்னதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவிகணேசன் பேசினார். அப்போது அவர், ‛‛தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்த ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் தொழிலாளர் நலனை காக்கவும், மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

பணி நியமன ஆணைகள்
முன்னதாக இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1000க்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

பதவிகளில் குழப்பம்
முன்னதாக திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பிற தோழமை கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளை திமுகவினர் கைப்பற்றியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளில் உள்ள திமுகவின் அதை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் காட்டமாக அறிக்கை விடுத்தார். இதையடுத்து சில இடங்களில் திமுகவினர் பதவிகளை ராஜினாமா செய்கின்றனர். சில இடங்களில் ராஜினாமா செய்ய மறுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications