தமிழக பாஜக தலைவர்கள் அவசர டெல்லி பயணம்
நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதையடுத்து பாஜக தேசிய தலைவரின் அழைப்பை ஏற்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அவசரமாக கிளம்பி டெல்லி சென்றுள்ளார்.
கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் ஆகியவை குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலையில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
ராஜ்நாத் சிங்:
முன்னதாக தமிழக பாஜக தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து தேர்தல் குறித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தியுள்ளீர்கள். ஆனால் முடிவு எதையும் காணவில்லை. நாம் மோடி அலையை நம்பி மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறோமே தவிர பிற கட்சிகளை நம்பி அல்ல.
கூட்டணிக்கு வரும் கட்சிகளை வைத்து அறிவிப்பு வெளியிடுங்கள். வராதவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம். தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை வைத்து கூட்டணி ஏற்படுத்துங்கள். தேமுதிகவுக்கு கூட்டணி குறித்து முடிவு எடுக்க வெகு நாட்கள் அளிக்க முடியாது. அவர்கள் விரைந்து முடிவு எடுக்காவிட்டால் பாமகவுடன் கூட்டணி என்று அறிவிப்பு வெளியிடுங்கள் என்று கூறியுள்ளாராம்.
இந் நிலையில் பாஜகவுடன் கூட்டணிக்கு தேமுதிக கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், திமுக தரப்பிலும் தேமுதிகவை இழுக்க முயற்சிகள் தொடர்கின்றன.