மெர்சலை எதிர்த்த பாஜக... வாங்கிக் கட்டிக் கொண்டது தான் தமிழகத்தில் தாமரை கட்சிக்கு இருக்கும் பவுசா?
மெர்சல் திரைப்படத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுதான் தமிழகத்தில் அந்த கட்சிக்கு இருக்கும் மதிப்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது என்று அந்தக் கட்சியினர் கூறி வந்த நிலையில் மெர்சல் பட விவகாரத்தில் பாஜகவிற்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் அந்தக் கட்சி உண்மையில் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் பாஜக தங்களுடைய இருப்பை நிலைநாட்டி வருகிறது. உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி கட்சிகளை ஓரம்கட்டி வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றது. இதே போன்று கோவா, அசாம் மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
பீஹாரிலும் லாலு பிரசாத், நிதிஷ்குமாரின் மகா கூட்டணியை உடைத்து பாஜக தயவில் அங்கும் ஆட்சி நடக்கிறது. இப்படி பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவின் கொடியை பறக்கவிட்டுள்ளனர் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும். தமிழகத்திலும் பாஜகவை வளர்க்கும் விதமாக இரண்டு முறை அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியானது.
பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக
ஆனால் இரண்டு முறையும் அவை தடைபட்டு போனது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தயவின்றி தேசிய கட்சிகளின் ஆட்சியை கொண்டு வர முடியாது என்ற நிலைமையில் சற்றும் மாற்றம் இல்லாமல் தான் இப்போதும் சூழ்நிலைகள் உள்ளன. எனினும் பாஜகவிற்கு சாதகமான கால நிலை போல ஜெயலலிதா மரணம் அமைந்துவிட வௌவௌத்துப் போன அதிமுக கோட்டையை தன்னுடைய கண்ணசைவில் வைத்திருக்கிறது பாஜக. தமிழக அமைச்சர்களே இவற்றை பொதுமேடைகளில் போட்டு உடைத்து வருகின்றனர்.
அதிகரித்திருக்கிறதா வாக்கு வங்கி
உள்ளாட்சித் தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்று அடுத்தடுத்து தேர்தல்கள் வரவுள்ள நிலையில் எந்தெந்த கட்சியின் வாக்கு வங்கி எப்படி உள்ளது என்பது அதன் முடிவுகளை பொருத்தே இருக்கும். எனினும் மெர்சல் பட விவகாரத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனத்தை நீக்க தமிழக பாஜக வலியுறுத்தியது.
தமிழகத்தில் எதிர்ப்பலை
இதற்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் அதிவேகமாக செயல்படும் இளைஞர்கள் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். கடந்த ஒரு வார காலமாகவே சமூக வலைதளங்களில் பாஜகவை சாடி பல்வேறு கருத்துகள் நிரம்பி வழிந்தன. இந்த கருத்துகள் தான் பாஜக தமிழகத்தில் சம்பாதித்திருக்கும் வாக்குகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசின் நிலைப்பாடே
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பாஜகவினர் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் மத்திய அரசின் பிரதிபலிப்பாகவே இருந்துள்ளனர். இதனால் மக்களின் வெறுப்பையே அதிக அளவில் சம்பாதித்துள்ளனர். தமிழக மக்கள் எதிர்த்த நீட் தேர்வை ஆதரித்தது, பணமதிப்பிழப்பு விவகாரம் என மக்கள் பிரச்னைகளில் அவர்களுக்கு எதிராகவே தமிழக பாஜக தலைவர்கள் இருந்துள்ளனர்.
தனிநபர் விமர்சனம்
மேலும் பாஜக தலைவர்கள் கூறும் கருத்துக்கு எதிர் கருத்து கூறுபவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். மத ரீதியான தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்றெல்லாம் தனி மனித தாக்குதல்களை தலைவர்கள் முன்எடுத்து வருகின்றனர். இவை மக்கள் மனதில் பாஜக மீது வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.
மக்களின் மதிப்பை பெறுவார்களா?
வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வரும் தமிழக பாஜகவின் செயல்பாட்டை மேலிடம் கண்காணிக்குமா. அல்லது மேலிட உத்தரவின் பேரிலேயே இது போன்ற செயல்களில் பாஜக தலைவர்கள் ஈடுபடுகின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியாக இருந்தாலும் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க கட்சியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.