ஸ்ரீரங்கம் தொகுதி காலி... என்று இதுவரை சபாநாயகர் அறிவிக்காதது ஏன்?
சென்னை: ஜெயலலிதா உறுப்பினராக இருந்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதி காலியாகி விட்டதாக தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் இன்னும் அறிவிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் முறைப்படி இவ்வாறு அறிவித்து, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கி வேண்டும். அதன் பிறகு 6 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ., முதல்வர் பதவி பறி போய் 10 நாட்களாகி விட்ட நிலையில் இன்னும் தமிழக பாநாயகரிடமிருந்து தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி எந்தத் தகவலும் போகவில்லை என்று தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவி தானாகவே பறி போய் விட்டது. கூடவே அவர் வகித்து வந்த சட்டசபை உறுப்பினர் பதவியும் போய் விட்டது.
இப்போது சட்டப்படி ஸ்ரீரங்கம் தொகுதி காலியாகி விட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக தேர்தலை நடத்த முடியாது. மாறாக, தொகுதி காலியாகி விட்டதாக சபாநாயகர் அறிவிக்க வேண்டும். அதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே தேர்தல் நடத்தப்படும்.
ஆனால் இதுவரை தமிழக சட்டசபை சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு எதுவும் தேர்தல் ஆணையத்திற்குப் போனதாகத் தெரியவில்லை என்கிறார்கள். அப்படி முறைப்படி தகவல் போன பின்னர், 6 மாதங்களுக்குள் ஆணையம் இடைத் தேர்தலை நடத்தும்.
அதேசமயம், தகவல் இன்னும் வராவிட்டாலும் கூட தீர்ப்பைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஸ்ரீரங்கத்தில் இடைத் தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டதாம்.
2015 ஜனவரி மாதம் ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளின் ஆட்சிக் காலம் முடிகிறது. எனவே அங்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று தெரிகிறது. அந்த சமயத்தில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. எப்படியும் ஜனவரிக்கு முன்பாகவே ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.